பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
11:07
ஊத்துக்கோட்டை: மாரியம்மனுக்கு ஜாத்திரையையொட்டி, கிராம தேவதைக்கு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும், மழை கொடுக்கும் மாரியம்மனுக்கு நன்றிக்கடன் செலுத்த, பக்தர்கள் ஜாத்திரை நடத்துவது வழக்கம். ஊத்துக்கோட்டையில் வரும், 18 மற்றும், 19 ஆகிய தேதிகளில், ஜாத்திரை நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று, மதியம், ஏரிக்கரையோரம் உள்ள கிராம தேவதை செல்லியம்மனுக்குப் பொங்கல் வைக்கும் விழா நடந்தது. முன்னதாக, ஏரிக்கரையின் ஒரு பகுதியில் இருந்து, கரகம் எடுத்து வந்து, கோவிலை மூன்று முறை சுற்றி வந்து, கோவிலில் வைக்கப்பட்டது. பின், மூலவர் செல்லியம்மனுக்குச் சந்தனக் காப்பு அணிவித்து, மலர், மாலைகளுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் பொங்கல் வைத்து, விளக்கேற்றி தேங்காய் உடைத்து, அம்மனை வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு, எல்லையம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரி கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நாளான, 18ம் தேதி, இரவு, 9:00 மணிக்கு, மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.