பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
12:07
கோவளம்:கோவளம் புனித கார்மேல் மாதா கோவிலில், தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது.திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலை, கோவளத்தில் புனித கார்மேல் மாதா கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழா, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருத்தல அதிபர், அமுல்ராஜ் தலைமையில் நடந்த இவ்விழாவில், தினமும் சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனைக் கூட்டங்களும் நடந்தன. பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு செங்கை மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையில் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் புனித கார்மேல் மாதா, மிக்கலசம் மனசு, அந்தோணியார், சூசையப்பர், இருதய ஆண்டவர் ஆகிய ஐந்து தேர்கள் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றது. மக்கள் வழிநெடுக்க மெழுகுவர்த்தி ஏற்றி, கற்கண்டு கொடுத்து வரவேற்று வழிபட்டனர். இதில் பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தொடர்ந்து விழா நிறைவு நாளான நேற்று மாலை, 6:00 மணிக்கு கொடியிறக்கப்பட்டது.