பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
12:07
கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே, 12.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக புவனேஸ்வரி அம்மன் சிலையை மீட்டு, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, காட்டுகாநல்லூர் வி.ஏ.ஓ., முனிவேலுக்கு, கீழ்வல்லம் கிராமத்தில், சக்திவேல் என்பவரது வீட்டில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை உள்ளதாக, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கண்ணமங்கலம் போலீசார், அங்கு சோதனை நடத்தினர். அப்போது, 26 செ.மீ., உயரம், 11 செ.மீ., அகலம், இரண்டரை கிலோ எடையளவு கொண்ட புவனேஸ்வரி அம்மன் சிலையை கண்டெடுத்தனர். இதுதொடர்பாக, கண்ணமங்கலத்தை சேர்ந்த அரிராஜா, 26, கோகுலன், 29, வேலூர் அடுக்கம்பாறையை சேர்ந்த தினேஷ், 24, வேலூர் நாகநதியைச் சேர்ந்த திருமலை, 35, ஆகியோரை கைது செய்தனர். இதில், தொடர்புடைய கீழ்வல்லத்தை சேர்ந்த சக்திவேல், 32, கலம்பூரான் கொட்டாயை சேர்ந்த சிலம்பு, 33, ஆகிய இருவரை தேடி வருகின்றனர். எந்த கோவிலில் இருந்து, சிலை திருடப்பட்டது, யாரிடமிருந்து வாங்கப்பட்டது என்பது, குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.