பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
05:07
ஆடிப்பெருக்கு தினத்தில், மஞ்சள் தேய்த்துநீராடி மாக்கோலம் போட்டு திருவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றி லலிதா சகஸ்ர நாமம், அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். வயதுக்கு வராத சிறு பெண்களை அம்மனாக பாவித்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு மஞ்சள் குங்குமம் அட்சதை சீட்டு, தோடு, கண்ணாடி வளையல்,ரவிக்கை ஆகிய ஒன்பது பொருட்களையும் தட்சிணையுடன் வைத்து கொடுத்து அன்னமிடல் வெகு சிறப்பான பலன் தரும். அம்பிகையின் அம்சமாக சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்பிதமணி, நலவிகாரிணி, கலவிகாரிணி, காளி ரவுத்திரி, சேட்டை, வாமை, ஆகிய நவ சக்திகளையும் சொல்வார். இந்த நவசக்தியரை குறிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்கள் வைத்து கொடுத்தல் வழக்கத்துக்கு வந்தது. ஆடி வெள்ளிக்கிழமை நாளில், சில குறிப்பிட்ட அம்மன் கோவில்களில், நவசக்தி பூஜை நடைபெறும். ஒன்பது வகையான மலர்களால் ஒன்பது சக்திகளையும் ஒரே நேரத்தில் ஒன்பது சிவாச்சாரியார்கள் அர்ச்சிப்பதே நவசக்தி பூஜை எனப்படும். இது மிகுந்த பலனளிக்க கூடியதாகும். சக்தி பீடங்களில் ஒன்றென கருதப்படும் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவிலில் ஆடி வெள்ளி மிகவும் விசேஷமாகும். இங்கு அம்மன் மாணவியாக இருக்க ஈசனே குருவாக இருந்து உபதேசம் செய்தருளினார். அதனால் பள்ளிக்குழந்தைகள் இங்கு ஆடி வெள்ளி அன்று வேண்டிக்கொண்டால் ஞாபக சக்தி மிகுந்து வரும். ஆடி வெள்ளி ராகு காலத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்ற, வாழ்வு ஒளி பெறும்.
ஆடிப்பௌர்ணமி: சங்கரன்கோயில் கோமதியம்மன் ஆடித்தபசு, குரு பூர்ணிமா, ஹயக்ரீவர் அவதார தினம் ஆகிய மூன்றும் இந்த நாளில் தான் வருகின்றன. நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் ஆடித்தபசு விழா மிகவும் சிறப்பாக பக்தியோடு பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பதினோராவது நாள், ஆடித்தபசு இந்த நாளில் லட்சக்கணக்கான பக்திகள் கூடுவார்கள். ஆடித்தபசுக் காட்சியை கண்டால் பாவங்கள் அனைத்தும் கரைந்து மனது லேசாகும் என்பது நம்பிக்கை. திருச்சி அருகே உள்ள உறையூரில் எழுந்தருளியுள்ள பஞ்சவர்ணேஸ்வரர் பெருமான், ஆடிப்பௌர்ணமி நாள் ஒன்றில் தான் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணங்களில் காட்சி அளித்தாராம்.