ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள வேதநாயகி அம்மன் சன்னதிக்கு எதிரில் சுவரில் மூன்று துவாரங்கள் உள்ளன. 1802ல் சேலம், கோவை பகுதிகளுக்கு பவானி தலைமையிடமாக இருந்தது. அப்போது கலெக்டராக இருந்த வில்லியம்கரோ, அம்மனின் மகிமையை கேள்விப்பட்டு தரிசிக்க விரும்பினார். வேற்று மதத்தினர் என்பதால் அதனை நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை. இதனால் அம்மனின் சன்னதி எதிரில் மூன்று துவாரம் அமைத்து தினமும் வழிபட்டார். ஒருநாள் இரவு வீட்டில் தூங்கிய அவரை இளம்பெண் ஒருத்தி எழுப்பி, வீட்டை விட்டு உடனே வெளியேறும்படி உத்தரவிட்டாள். அதற்கு கட்டுப்பட்ட கலெக்டரும் வெளியேறினார். அன்றிரவே வீட்டின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. அம்மன் அருளால் உயிர் காக்கப்பட்ட கலெக்டர், தங்கத்தால் கட்டில் செய்து கோயிலுக்கு கொடுத்தார்.