பதிவு செய்த நாள்
22
பிப்
2026
12:02
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோவிலில் நான்குகால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
தவிர கந்த சஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உத்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்தாண்டு பிரம்மோத்சவ பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதிகாலை 4:30 மணியளவில், கோவில் வட்ட மண்டபத்தில் உத்சவர் கந்தசுவாமி பெருமான், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து உற்சவர் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேர் திருவிழா வரும் 27ம் தேதியும், மார்ச் 2ம் தேதி இரவு தெப்பல் உத்சவமும், 5ம் தேதி காலை திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் செய்துள்ளனர்.