பதிவு செய்த நாள்
10
ஆக
2018
02:08
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் சிதிலம் அடைந்த, வீரவசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிக்காக, ராசிபுரம் கற்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன, என, தக்கார், கருமுத்து கண்ணன் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வீர வசந்தராயர் மண்டபத்தின் சிதிலமடைந்த பகுதி முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. புதிய கற்துாண்கள் பதிப்பதற்காக மாநில அளவில், 14 இடங்களில் கல் குவாரிகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றின் தரம், உறுதித்தன்மை குறித்து சென்னை, ஐ.ஐ.டி., ஆய்வு செய்தது.இதில் ராசிபுரம் அருகே பட்டினம் குவாரியின் கற்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கிருந்து 1 லட்சம் கன அடி எடையுள்ள கற்கள் எடுக்கப்படும்.
புனரமைப்பு பணிக்கு, 70 ஆயிரம் கன அடி தேவைப்படும். செதுக்கும் போது சேதமாகலாம் என்பதால், 1 லட்சம் கன அடி கற்கள் வாங்கப்படவுள்ளன.அந்த குவாரியில், கற்கள் எடுக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. புனரமைப்பு பணியை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஸ்தபதி குழுவினர் கற்துாண்களின் பழமை மாறாமல் செதுக்குவர். பொற்றாமரைக்குளம் புனரமைப்பு பணிக்காக, தெற்கு பகுதியில், பழைய துாண்கள் அகற்றப்பட்டு, புதிய கற்துாண்கள் பொருத்தப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தெற்கு பகுதியில் புதிய கற்துாண்கள் பொருத்தும் பணி இரண்டு மாதங்களுக்குள் முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.