கோவை : ஈஷா யோகா மையம் சார்பில் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி முன்பு குருபெளர்ணமி விழா இன்று (ஜூலை 27) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஆதியோகியான சிவன் யோக விஞ்ஞானத்தை சப்தரிஷிகளுக்கு அளித்து ஆதிகுருவாய் உருவெடுத்த திருநாளே குரு பெளர்ணமி. மனிதனின் உள்நிலை மாற்றத்திற்கு இந்த குரு பௌர்ணமி நாள் சிறந்த வாய்ப்பாக அமைகிறது. யோக பாரம்பரியத்தில் சிவனை கடவுளாக வணங்குவதில்லை. சிவனை ஆதியோகியாகவும் ஆதிகுருவாகவும் பார்க்கிறோம்.
ஆதியோகியிடமிருந்து தான் யோகா முதன்முதலில் தோன்றியது. சப்தரிஷிகள் என அழைக்கப்படும் ஏழு பேர் ஆதியோகியான சிவனிடமிருந்து பெற்ற யோகப் பயிற்சிகளை 84 வருடங்கள் தொடர்ந்து செய்தனர். அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவன் தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியன்று தெற்கு நோக்கி அமர்ந்து, அவர்களுடன் யோக அறிவினை பகிர்ந்து கொண்டார். சிவன் ஒரு குருவாக அமர்ந்து யோக அறிவினை பகிர்ந்து கொண்டதால் அந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இதன்காரணமாக, ஈஷா யோகா மையம் சார்பில் குரு பெளர்ணமி தினம் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாட்டபட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு குரு பெளர்ணமி தின விழா கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள 112 அடி ஆதியோகி முன்பு இன்று (ஜுலை 27) நடைபெற்றது.
இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அவர்களின் சிறப்பு சத்சங்கம் நடைபெற்றது. மேலும், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சி, கேள்வி - பதில் நிகழ்ச்சி, நள்ளிரவு கூட்டு தியானம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த குரு பெளர்ணமி விழாவில் கலந்துகொண்டனர். அனைவருக்கும் காலையும் மாலையும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை நடைபெற்ற சத்சங்கத்தில் சத்குரு அவர்கள் பேசியதாவது: இந்த குரு பெளர்ணமி நாளில் தான் உலகின் முதல் குரு பிறந்தார். ஆதியோகியான சிவன் ஆதிகுருவாக மாறி சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பகிர்ந்து கொண்டார். நீங்கள் கடவுளாக வணங்கும் சிவனை யோக கலாச்சாரத்தில் ஆதியோகியாக பார்க்கிறோம். அதாவது முதல் யோகியாக பார்க்கிறோம். அவர் இந்த மண்ணில் நம்மை போன்றே மனிதனாக வாழ்ந்து உள்நிலையில் உச்சத்தை தொட்டவர். அதனால் தான் 15,000 ஆண்டுகள் கடந்தும் சிவனுடைய புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உள்நிலையில் உச்சத்தை தொட முடியும் என்பதை உலகத்துக்கு உணர்த்தியவர்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது இங்கு ஒவ்வொருடைய வீட்டிலும் ஆன்மிகமும் கல்வியும் சிறப்பாக பரிமாறப்பட்டு கொண்டு இருந்தது. அதை பார்த்த ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடம் இருந்து ஆன்மிகத்தை எடுத்தால் தான் நாம் அவர்களை முழுமையாக அடிமைப்படுத்த முடியும் என கருதினார்கள். அதற்கு அவர்கள் பல செயல்கள் செய்தார்கள். குரு பெளர்ணமி கொண்டாட்டத்தும் தடை விதிக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் அது முடியவில்லை. இவ்வாறு சத்குரு பேசினார்.