பதிவு செய்த நாள்
29
ஆக
2018
12:08
அரூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, அரூர் அருகே, பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா வரும், செப்., 13ல், நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, புழுதியூர் புதன் சந்தை அருகே, பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, ஸ்தபதி குமரேசன் கூறியதாவது: கடந்த, 20 ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறேன். அரசு உத்தரவுப்படி, நீர்நிலைகள் மாசுபடாத வகையில், களிமண் மற்றும் காகிதக்கூழ் பயன்படுத்தி தண்ணீரில் எளிதில் கரையும் வகையில், சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. சிலைகளுக்கு ரசாயனம் கலக்காத வர்ணம் பூசப்படுகிறது. இங்கு, ஆஞ்சநேயர் மீது அமர்ந்த நிலையில் விநாயகர், கருடன் பஞ்சமுக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி சுவாமிக்கு இடையில் விநாயகர், நந்தி விநாயகர், மயில், யானை விநாயகர், செல்வ விநாயகர், காமதேனு விநாயகர், சிவன், பார்வதி விநாயகர் என, பல்வேறு வடிவங்களில், அரை அடி முதல், 13 அடி உயரம் வரை, விநாயகர் சிலைகள் உள்ளன. ஐம்பது ரூபாய் முதல், 18 ஆயிரம் ரூபாய் வரை, விலை கொண்ட, 250க்கும் மேற்பட்ட சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.