ஆதியில் பிரசித்தி பெற்ற ‘திருமந்திர நகர்’ என்ற ஊரின் தற்போதைய பெயர் தூத்துக்குடி. இங்கு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள வரதராஜபுரத்தில் அமைந்துள்ளது சந்தான கிருஷ்ண சுவாமி கோயில். குருவாயூரப்பன் போல், உடுப்பி கிருஷ்ணர் போல் நின்ற திருக்கோலத்தில் குழந்தைக் கண்ணனாக குறும்புப் புன்னகையுடன், இருகரங்களிலும் வெண்ணெய் உருண்டைகளை ஏந்திய வண்ணம் எழில் வடிவமாய்க் காட்சி தருகிறார் சந்தான கிருஷ்ணர். கிருஷ்ண ஜெயந்தி நாளில் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து விதவிதமாக நேர்த்திக்கடன் செலுத்துவதைப் பார்க்கவே பரவசம் பொங்கும். தாய்மார்கள் கைக்குழந்தைகளுடன் இங்கு வந்து சுவாமி சன்னதியில் பிரார்த்தித்தபடி குழந்தைகளுக்கு அன்னப்பிராசனம் செய்கிறார்கள். இப்படிச் செய்வதால் ஞானமும் கல்வியும் பெற்று அந்தக் குழந்தை சிறப்புடன் வாழும் என்பதும், சுவாமிக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்பதும் நம்பிக்கை!