பதிவு செய்த நாள்
07
பிப்
2012
01:02
வடபழனி : தைப்பூச விழா, வடபழனி முருகன் கோவிலில், வெகு சிறப்பாக நடைபெற்றது. வடபழனி முருகன் கோவிலில், ஆண்டு தோறும் தைப்பூச விழா நடைபெறும். நேற்று காலையில் இருந்து, கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இவ்விழாவையொட்டி, வடபழனியைச் சுற்றியுள்ள பகுதிகளான விருகம்பாக்கம், அசோக் நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர் என, பல பகுதிகளில் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். பெரும்பாலான பக்தர்கள், பால் காவடி எடுத்து வந்த நிலையில், மற்ற பக்தர்கள் புஷ்ப அலங்காரம், பன்னீர் மற்றும் அலகு காவடிகளை எடுத்து வந்தனர். அலகு குத்தி தேர் இழுத்தும், தீ மிதித்தும் பிரார்த்தனையை பக்தர்கள் நிறைவேற்றினர். பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவதற்கு உதவியாக, அந்தந்த வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரம் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. பக்தர்கள் கொண்டு சென்ற பாலால், முருகனுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.