பதிவு செய்த நாள்
12
அக்
2018
11:10
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று, மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில், மாடவீதியில் வலம் வந்தார். ஆந்திர மாநிலம், திருப்பதி - திருமலையில், நேற்று முன்தினம் முதல், நவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.கலை நிகழ்ச்சிஇரண்டாம் நாளான நேற்று, சின்ன சேஷ வாகனத்தில், மலையப்பசுவாமி, கிருஷ்ணர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். பின், ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடந்தது. இரவில், சரஸ்வதி தேவி அலங்காரத்தில், கையில் வீணை ஏந்தி, அன்னப் பறவை வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தார். இதைக் காண, ஏராளமான பக்தர்கள் மாடவீதியில் கூடினர். வாகன சேவைக்கு முன், நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை பாடியபடி, திருமலை ஜீயர் குழாம் செல்ல, வாகன சேவைக்கு பின், கலை குழுவினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
மனவருத்தம்: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி வலம் வந்தபோது, வாகனத்தை பார்த்த பக்தர்கள் மனம் வருத்தம் அடைந்தனர். சின்ன சேஷ வாகனத்தில் உள்ள தங்கமுலாம் மாறி, செப்பு தகடுகள் வெளியில் தெரிந்தன. மேலும், ஐந்து தலையுள்ள சின்ன சேஷ வாகனத்தில், சில தலைகளில், கண்கள் வாய் உள்ளிட்டவற்றில் உள்ள நிறங்கள், மங்கி அழிந்து போயிருந்தன.ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பிரம்மோற்சவம் நடக்கிறது. அப்போது அனைத்து வாகனங்களும் மாடவீதியில் வலம் வருகின்றன. அவ்வாறு வரும் போது, வாகனங்கள் அதற்கேற்ற மெருகோடு இருந்தால் காண்பவர் மனதை கவரும்.
பக்தர்கள் வேண்டுகோள்: அதனால், இனி வரும் காலங்களில் பிரம்மோற்சவத்திற்கு முன், வாகனங்களை நன்கு பராமரித்து, அதற்கு மெருகேற்றி, வாகன சேவையின் போது பயன்படுத்த வேண்டும் என, பக்தர்கள், தேவஸ்தான நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.பிரம்மோற்சவத்தின் முதல் நாளில், 67 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும், உண்டியல் வருமானம் மூலம், 3.25 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும், தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.