பதிவு செய்த நாள்
15
அக்
2018
04:10
அகில இந்திய சாயி சமாஜத்தின் நிறுவனர் மறைந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜி, சீரடிக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள நினைக்கும் பயணிகளின் நன்மைக்காக, உதவியாய் இருக்க, முதன்முதலாக அகில இந்திய சாயி சமாஜத்தின் வெளியீடாக “ஷீர்டி பிரயாண மார்க தர்சினி” ஷீர்டியும் பாபா ஷேத்ரங்கள் வழிகாட்டி” என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதன் முதல் அத்யாயத்தில் அவர் எழுதியிருக்கிறார்.
பாபா சீரடியை தான் வாழத் தகுதியான இடமாக ஏன் தேர்ந்தெடுத்தார்? மகாராஷ்ட்ர மாநிலத்தில் வேறு எத்தனையோ சிறந்த ஊர்கள் இருக்கும்பொழுது, அவர் ஏன் சீரடியை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்? பைடானுக்கு ஏசுநாதரும், ஆலந்திக்கு ஞானேச்வரரும் எப்படியோ அப்படியே சீரடிக்கு சாயீ பெருமை சேர்த்தார். ஸமர்த்த ராமதாசர் (சத்ரபதி சிவாஜியின் குரு) என்று புகழப் பெற்ற ஞானி உலகத்தை உய்விப்பதற்காக கோதவரி நதி தீரத்திலிருந்து கிருஷ்ணாநதி தீரத்திற்கு வந்தார். அதேபோல நம் ஸாயிநாதரும் சீரடி கிராமம் செய்த புண்ணியத்தால், அங்கு வாழும் மக்களின் புண்ணியச் செயல்களின் கூட்டுப் பலனாக, கோதாவரி நதி கரைக்கு அருகில் உள்ள சீரடிக்கு வந்தார். அது மட்டுமல்ல, அவரது முந்திய பிறவிகள் ஒன்றில் அவர் குருவாக இருந்த மகானின் சமாதி சீரடியில் அவர் முதன் முதலில் தங்கிய வேப்ப மரத்திற்கு அருகில் பூமிக்குள் இருந்த காரணத்தினாலும் இருக்கலாம். குருவின் அருகாமை அவருக்கு தேவைப்பட்டது. எத்தகைய குரு பக்தி? எனவேதான் அன்று மகராஷ்ட்ராவின் மற்றைய பகுதிகளில், ஊர்களில் உள்ளவர்களும் அறிந்திராத அவ்வளவு மிகச் சிறிய கிராமமான சீரடியை தேர்ந்தெடுத்தார்.
அன்று சீரடியில் 100 மண் குடிசைகளே இருந்தன. மொத்தம் ஏறக்குறைய 2000 மக்கள் வசித்து வந்தார்கள். போக்குவரத்து வசதி ஏதுவும் இல்லை. மின்சாரம் அந்த கிராமத்திற்கு வரவில்லை. காடா விளக்குகளும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளும் தான் வெளிச்சத்திற்கு உதவின. பொது உபயோகத்திற்காக இரண்டு கிணறுகள். அதில் ஒன்றில் உள்ள தண்ணீர் உப்பாயிருந்தது. இரண்டு பள்ளிக்கூடங்கள், ஒன்று ஆரம்பப் பள்ளிக்கூடம், மற்றொன்று மராத்தி மிஷன் பள்ளிக்கூடம். விவசாயம் தான் அங்கு வசித்து வந்த மக்களுக்கு வாழ்வாதாரம். மிகவும் ஏழ்மை நிலை. முஸ்லீம்களும், இந்துக்களும் அங்கு வசித்து வந்தனர். ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. இரண்டோ அல்லது மூன்றோ மளிகைக் கடைகள் இருந்தன. இரண்டு மசூதிகள் இருந்தன. ஒன்றில் தொழுகையே நடக்கவில்லை. பாழடைந்திருந்தது. சீரடியில் பசுக்களை பராமரித்து வரும் கோசாலைகள் நிறைய இருந்தன. மற்ற ஊர்களினின்றும் பசுக்களை நன்கொடையாக இங்கு கொண்டு வந்து விடுவார்களாம். அதனால் தானோ என்னவோ இன்றும் பாபாவின் காலை காக்கட் ஆரத்திக்குப் பிறகு அவருக்கு பசு வெண்ணையும், சர்க்கரையும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. பேருந்து வசதி இல்லை. 18 கி.மீ. தொலைவில் உள்ள கோபர்காவ் என்ற ஊரில் உள்ள இரயில் நிலையத்தை அடைந்து, அங்கிருந்து குதிரை வண்டிகள் மூலமாகத் தான் சீரடிக்கு வர வேண்டும். அதை விட்டால் வேறு வழியில்லை. கோபர் காவ் என்ற ஊரில் கோதாவரி நதி ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றும் அப்படித்தான். கோதாவரியில் வெள்ளம் அதிகமாயிருந்தால் படகுகள் மூலம் இக்கரைக்கு வந்து குதிரை வண்டியில் ஏறி அடுத்துள்ள நிம்காங் வந்ததுமே தொலைவில் சீரடி தெரியும். இதுதான் சீரடியின் அன்றைய நிலை இப்படியிருந்த சீரடியில் வாழ்ந்து வந்த பாபா, தன் அடியவரான மகல் சாபதியிடம் கூறுவாராம். “அரோ!பகத்! இங்கு மாட மாளிகை, கூட கோபுரங்கள் உருவாகும். மக்கள் ரதங்களில் செல்வார்கள். அது மட்டுமல்ல மக்கள் சாரி சாரியாக எறும்பைப் போல ஊர்ந்து செல்வார்கள் என்று”. யாராக இருந்தாலும் அன்றைய நிலையில், கேலியாக சிரிக்கத் தான் செய்வார்கள். பாபா இவ்வாறு கூறுவதைக் கேட்டு ஒரு குக்கிராமத்தில் மாட மாளிகைகள் தோன்றுவதாவது?
ஆனால் ஞானிகளின் கூற்றுக்கள் என்றுமே பொய்யாவதில்லை. தீர்க்க தரிசிகள் அல்லவா அவர்கள்! இன்று சீரடியில் மாட மாளிகைகளை காணலாம். எண்ணற்ற அடுக்குமாடிக் கட்டிடங்கள், தெருக்களில் புதிய மாடல் கார்கள் (ரதம்). மக்கள் சாரி சாரியாக எறும்புகளைப் போல் சாலைகளில் செல்கிறார்கள். அவரை சமாதி மந்திரிலும், துவாரகாமாயியிலும் மணிக்கணக்கில் நின்று வரிசையாகச் சென்று தான் பாபாவை வணங்க முடியும். அன்று பாபா கூறியது இன்று உண்மையாயிற்றா இல்லையா? எண்ணற்ற தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், சிறப்பு மருத்துவம் செய்யும் மருத்துவமனை, பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், அவ்வளவு ஏன் ஒரு இரயில் நிலையம், கூட இரண்டாண்டுகளுக்கு முன் வந்து விட்டது. சொகுசுப் பேருந்துகள், விரைவில் விமான நிலையமும் வரும். இரவைப் பகலாக்கும் விளக்குகள், இரவு, பகல் என்று பாராமல் வீதிகளில் மக்கள் கூட்டம். இதுதான் இன்றைய சீரடி, அன்றைய குக்கிராமம் இன்று தூங்கா நகரம் ஆகிவிட்டது. எந்நேரமும் மக்கள் பேருந்துகளிலும், கார்களிலும், வந்திறங்கிய வண்ணம் உள்ளனர்.
சீரடியின் ஆரம்ப காலப் பெயர் ஷிலாதி. நாளடைவில் ஷிலாதி தான் சீரடி என்று மாறிற்று.
பகவான் இரமண மகிரிஷியிடம் ஒருவர் கேட்டார் “உங்களுடைய தெய்வீக சக்தி தானே உலகெங்கிலுமுள்ள மக்களை திருவண்ணாமலைக்கு இழுத்து வருகிறதென்று ”. உடனே பகவான் பதிலளித்தார் “பகவான் என்றழைக்கும் என்னை எந்த சக்தி திருவண்ணாமலைக்கு இழுத்து வந்தது? அந்த அருணாசலேட்சுவரர் என்ற சக்தி.
இன்று இலட்சோப இலட்சம் மக்களை சீரடிக்கு இழுக்கும் சக்தி சீரடி சாயி பாபாவின் தெய்வீக சக்தி என்றால் அவரை சீரடிக்கு இழுத்து வந்தது எந்த சக்தி? சீரடியில் உள்ள அவரது முற்பிறவி குருவின் சமாதி. பாபா கூறினார். “இது என்னுடைய குருவின் இடம். எனவே நான் இங்கு வந்தேன்”.