பதிவு செய்த நாள்
25
அக்
2018
02:10
சென்னிமலை: பிடாரியூர் மாரியம்மன் கோவில், பொங்கல் விழாவில், பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலி கொடுத்தும், மாரியம்மனை வழிபட்டனர்.
சென்னிமலை அடுத்த, முகாசிபிடாரியூரில் அமைந்துள்ளது, பிடாரியூர் மாரியம்மன் கோவில். கோவிலின் பொங்கல் விழா, கடந்த ஒன்பதாம் தேதி, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 16ம் தேதி, கம்பம் நடுதலை தொடர்ந்து, தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள், தினமும் மஞ்சள் நீர் ஊற்றியும், வேப்பிலை அலங்கரித்தும், மஞ்சள் பூசியும் கம்பத்திற்கு, வழிபாடு நடத்தினர். அக்னி சட்டி எடுத்தும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் (அக்.,23ல்) இரவு, மாவிளக்கு ஊர்வலமும், நேற்று (அக்.,24ல்), பொங்கல் விழாவும் நடந்தது.
பக்தர்கள் காலை முதல், கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும், பக்தி பரவசத்துடன் மாரியம்மனை வழிபட்டனர். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (அக்., 25ல்), மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன், பொங்கல் விழா, நிறைவு பெறுகிறது.
* ஈங்கூர் கிராம மாரியம்மன் கோவில், பொங்கல் திருவிழா, ஆண்டு தோறும் ஐப்பசியில், 10 நாட்கள் கொண்டாடப்படும். இதையொட்டி, கடந்த 16ம் தேதி இரவு, பூச்சாட்டுதல், அம்மன் அழைத்தல் மற்றும் கம்பம் நடுதலுடன், பொங்கல் விழா தொடங்கியது. காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இன்று(25ம் தேதி) காலை, மாவிளக்கு மற்றும் பொங்கல் விழா நடக்கிறது.
* சென்னிமலை மாரியம்மன் கோவில், பொங்கல் விழா, நேற்றிரவு (அக்.,24ல்) பூச்சாட்டுதல், நிகழ்ச்சியுடன் தொடங்கியது, 31ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், நவ.,8ம் தேதி பொங்கல் விழாவும் நடக்கிறது.