பதிவு செய்த நாள்
05
நவ
2018
11:11
கோட்டயம் : சபரிமலை அய்யப்பன் கோவிலில் செய்தி சேகரிக்க, பெண் நிருபர்களை அனுப்ப வேண்டாம் என, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களிடம், கேரளாவைச் சேர்ந்த ஹிந்து அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண் களையும் அனுமதிக்கும்படி, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கேரளா முழுவதும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. சமீபத்தில், அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டபோது, சன்னிதானம் அருகே வந்த சில பெண்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் போராட்டத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பதற்றம் நிலவியது.
சபரிமலை அய்யப்பன் கோவில், சிறப்பு பூஜைக்காக, இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், வி.எச்.பி., ஹிந்து ஐக்கியவேதி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளின் கூட்டமைப்பான, சபரிமலை கர்ம சமிதி, ஊடகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
சிறப்பு பூஜைக்காக அய்யப்பன் கோவில் திறக்கப்படும்போது, செய்தி சேகரிக்க, பெண் நிருபர்களை அனுப்ப வேண்டாம். சபரிமலைக்கு பெண் நிருபர்களை அனுப்புவது, நிலைமையை மேலும் சிக்கலாக்கும். அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து பெண்களும் செல்லலாமா என்பது குறித்த, பக்தர்களின் நிலைப்பாட்டை, ஆதரிக்கவும், எதிர்க்கவும் பத்திரிகைகளுக்கு உரிமை உள்ளது.
இருப்பினும், நிலைமையை மோசமாக்கும் வகையில் உங்களின் நிலை இருக்காது என, நம்புகிறோம். பெண்களை அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனுக்களை, 13ல் விசாரிக்க, உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு, பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும், அந்த தீர்ப்பை அவசரமாக அமல்படுத்தும் நோக்கில்,
மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், போராட்டங்களை நடத்துவதை தவிர, பக்தர்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சபரிமலையில், கடந்த மாதம் நடை திறக்கப்பட்டபோது நடந்த அசம்பாவிதம் போல், தற்போது எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இதற்காக, பம்பை, நிலக்கல், சன்னிதானத்தில், 2,000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, எந்த ஒரு பெண்ணும், சபரிமலை தரிசனத்துக்கு செல்வதற்கு பாதுகாப்பு அளிக்கும்படி, எங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை. அப்படி யாராவது கோரிக்கை வைத்தால், அவர் களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.-பி.பி.நூஹ், கலெக்டர், பத்தனம்திட்டா