பதிவு செய்த நாள்
17
நவ
2018
02:11
மாமல்லபுரம்:மாமல்லபுரம், பூதத்தாழ்வார் உற்சவம், சுவாமிகள் மரியாதையுடன் நிறைவுற்றது.மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், 7ல் பூதத்தாழ்வார் உற்சவம் துவங்கி, தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
நேற்று முன்தினம் (நவம்., 15ல்), திருத்தேரில் வீதியுலா நடந்தது.இறுதிநாளான நேற்று (நவம்., 16ல்) காலை, மூலவர் திருமஞ்சனம் நடந்தது.அவருக்கு இரண்டாம் திருவந்தாதி சாற்றுமறை சேவையாற்றி, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை, ஆண்டாள், ராமர், லட்சுமி நரசிம்மர் ஆகியோர் மரியாதை அளித்தனர்; பெருமாள் கைத்தல சேவையாற்றினார்.
தொடர்ந்து, கோவிலிலிருந்து, ஆதிவராக பெருமாள் கோவில் சென்று, அவரது மரியாதையை ஏற்று, வீதியுலா சென்று, அவரது அவதார நந்தவன பகுதி மண்டபத்தில், மண்டகப்படி நடந்தது. அதே மண்டபத்தில், மாலை, தேவியருடன் பெருமாள் எழுந்தருளி, திருமஞ்சனம் நடந்து, திருப்பாவை சேவையாற்றி, தேவியருடன் பெருமாள், ஆழ்வார் வீதியுலா சென்றனர். கோவிலில், இரவு, திருவாய்மொழி சாற்றுமறை சேவைகள் நடந்தன.திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி வெங்கடேசர், காஞ்சிபுரம் வரதராஜர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்கள் சார்பில், ஆழ்வாருக்கு, பரிவட்ட மரியாதை அளித்து, உற்சவம் இனிதே நிறைவடைந்தது.