சபரிமலையில் மண்டல காலம் தொடக்கம்: பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2018 12:11
சபரிமலை: புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்தார். இதையடுத்து சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது.
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள் ஒரு மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை முதல் தேதியான நேற்று அதிகாலை 3.00 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு பல்வகை அபிஷேகங்கள் நடத்திய பின்னர், நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமமும் உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜையும் நடந்தது. டிச., 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது.நேற்று 18-ம் படியேறுவதற்காக நீண்ட கியூ காணப்பட்டது. காலை 9:00 மணிக்கு சபரிமலையை பக்தர்களே சுத்தமாக பராமரிக்கும் புண்ணியனம் பூங்காவனம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் வழிபாடுகளை நடத்தவும், வழிபாடு பொருட்களை சமர்ப்பிக்கவும் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.பெண்கள் வரலாம் என்ற உத்தரவால் சன்னிதானத்தில் பெண் போலீஸ் உட்பட 1500-க்கும் மேற்பட்டபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மதிய நேரங்களில் பக்தர்கள் கூட்டம் குறையும் போது எங்கும் போலீஸ் தலைதான் தென்படுகிறது. நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.