திருவனந்தபுரம் : சபரிமலையில் எந்த விதப் போராட்டங்களுக்கும் அனுமதி அளிக்க கூடாது என்று கேரள அரசுக்கு அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. மேலும், மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜையின் போது சன்னிதானத்தில் பக்தர்களை கண்காணிக்க இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி ஆகியோரைக் கொண்ட மூன்று நபர் குழுவையும் நியமித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சன்னிதான வளாகத்தில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகளை நீக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், பெண்கள், முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோயில் வளாகத்தில் தங்குவதற்கு தடையில்லை. பக்தர்கள் சரண கோஷம் எழுப்புவதும், பஜனை பாடல்கள் பாடுவதும் அவர்களின் உரிமை என்று தெரிவித்துள்ளனர்.
பெண்களை சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் பிரச்சினை இல்லாமல் சுமுகமான முறையில் இதனை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை கேரள அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.