பதிவு செய்த நாள்
09
டிச
2018
12:12
சபரிமலை,:கேரளாவில், சபரிமலைக்கு வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், நிலக்கல்லில் பக்தர்களுக்கான வசதி களை மேம்படுத்த தேவசம்போர்டும், அரசும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல காலத்தின் துவக்கத்தில் இருந்த பதற்றமும், பரபரப்பும் குறைந்து வருகிறது. போலீசார் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.பம்பை கணபதி கோவில் சுற்றுப்புறங்களில் ஏற்படுத்தியிருந்த சிறப்பு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.
பெண் போலீசார் உட்பட, போலீசாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு வருகிறது. இதனால், சபரிமலை இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது.கடந்த ஆண்டை போல், பல மணி நேரம் நீண்ட வரிசை என்ற நிலை இல்லாவிட்டாலும், இடைவெளி இல்லாமல் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். 18-ம் படியில் பக்தர்கள் தொடர்ந்து ஏறுகின்றனர்.தற்போது, பெரும்பாலும் ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா பக்தர்கள் தான் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் சன்னிதானத்தில் தங்கி, அடுத்த நாள்அபிஷேகம் நடத்தி செல்கின்றனர்.இதை தொடர்ந்து, நிலக்கல்லில் பக்தர்களுக்கான வசதிகளை அதிகரிக்க தேவசம்போர்டும், அரசும் நடவடிக்கைஎடுத்து வருகின்றன.தனியார் பஸ்களில் வரும் பக்தர்களை, கேரள அரசு பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்து செல்ல, 10 பார்க்கிங் கிரவுண்டுகளை இணைத்து, சர்க்குலர் பஸ் விடப்பட்டுள்ளது.நிலக்கல்லில், 1,000 பக்தர்கள் தங்க வசதியாக இரண்டு ஷெட்டுகள் அமைக்கும் பணியை, டாடா நிறுவனம் செய்து வருகிறது.மேற்கூரை அமைத்து தரையில் கான்கிரீட் போட்டதும், இங்கு பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படுவர்.இம்மாத இறுதிக்குள் இப்பணி முடிவடையும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.சபரிமலையில் மூலவருக்கு எட்டு வகை திரவியங்களால் நடத்தப்படுவது, அஷ்டாபிஷேகம். மண்டல, மகர விளக்கு காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், இந்த அபிஷேகம் நடத்தப்படுவ தில்லை.இந்த ஆண்டு மண்டல சீசனில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால், துவக்க நாட்களில் நடத்தப்பட்டது. தற்போது கூட்டம் அதிகரித்து வரும் நிலையிலும், அஷ்டாபிஷேகம் தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.அஷ்டாபிஷேகத்துக்கான கட்டணம், 5,000 ரூபாயை, தேவசம்போர்டு அலுவலகத்தில் செலுத்தினால், களபம், திருநீறு, தேன், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், நெய் ஆகிய எட்டு வகை திரவியங்கள் வழங்கப்படும்.இதை சன்னதியில் கொடுத்து, அபிஷேக தரிசனம் செய்து பிரசாதம் பெற்று செல்லலாம்.