இரவு பதினொருமணி இருக்கும். மடத்தின் சமையல்காரரைக் கூப்பிட்டு “ரவாதோசை செய்கிறாயா?” எனக் கேட்டார் மகாசுவாமிகள். ரவாதோசையை இந்நேரத்தில் கேட்கிறாரே? என யோசித்தாலும், இப்படியாவது அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் பாக்கியம் கிடைத்ததே என எண்ணிக் கொண்டார். ’மடத்தில் ரவை இல்லையே! நேரமாகி விட்டதால் மளிகைக்கடையும் பூட்டியிருக்குமே?’ என நினைத்தவர், சிப்பந்தி ஒருவரிடம் ரவை வாங்கி வர அனுப்பினார். உடனடியாக சென்ற அவர், பூட்டிக் கொண்டிருந்த ஒரு கடைக்காரரை தடுத்து, ரவையை வாங்கி வந்தார். சமையல்காரர் பரபரப்புடன் வேலையில் ஈடுபட்டார். ’எதற்கும் இருக்கட்டும்’ எனப் பத்து தோசைகளைத் தயாரித்தார். “தோசை கொண்டு வரட்டுமா” எனக் கேட்க புன்னகைத்த சுவாமிகள், “இந்த அர்த்தராத்திரியில் உன்னை வேலை வாங்கி விட்டேனே! தோசையை ஒரு பாத்திரத்தில் மூடி வைத்திடு” என்றார். ஏதும் புரியாத சமையல்காரர், ’நள்ளிரவில் ரவாதோசை கேட்பானேன்? பிறகு மூடி வைக்கச் சொல்வானேன்? சித்தன் போக்கு சிவன் போக்கு’ என முணுமுணுத்தபடி களைப்புடன் உறங்கப் போனார். சற்று நேரத்தில் மடத்திற்கு மூன்று பக்தர்கள் வந்தனர். அவர்களை உள்ளே அழைத்து வர சொன்னார் சுவாமிகள்.
நள்ளிரவிலும் மகான் தரிசனம் தங்களுக்கு கிடைத்ததை எண்ணி பரவசம் கொண்டனர். ஆந்திராவிலிருந்து வருவதாகவும், வழியில் பஸ் பழுதானதால் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். “சாப்பிட்டீர்களா?” எனக் கேட்டார் சுவாமிகள். “தாமதமாகி விட்டதால் வழியில் எங்கும் நிற்க வில்லை. இந்த நேரத்தில் எந்த ஓட்டல் திறந்திருக்கும்?” என பதிலளித்தனர். அதற்கு சுவாமிகள் புன்முறுவலுடன், “அர்த்தராத்திரியிலும் உணவு கிடைக்கும் இடம் இருக்கிறது” என்று சொல்லி சமையல்காரரை வரவழைத்தார். அவரிடம், “இவர்கள் வந்த பிறகு தோசை தயார் செய்தால் பசிபொறுக்க முடியாது என்பதால் தான் முதலிலேயே செய்யச் சொன்னேன். தோசையை இப்போது பரிமாறு” என்றார் சுவாமிகள். பக்தர்களை நோக்கிய அவர், “முதலில் சாப்பிட்டு ஓய்வெடுங்கள். நாளை காலையில் நிதானமாகப் பேசலாம்” என்றார். தன்னைத் தேடி வருவோர் பசியால் வாடக்கூடாது என்பதில் அக்கறை காட்டிய சுவாமிகளின் செயல், பெற்ற தாயாரை ஞாபகப்படுத்தியது. அந்த ’தாயுமானவரை’ மீண்டும் வணங்கிய அவர்கள் சாப்பிட அமர்ந்தனர். திருப்பூர் கிருஷ்ணன்