பதிவு செய்த நாள்
22
ஜன
2019
02:01
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், தைப்பூச விழா, விமரிசையாக நடந்தது.ஊட்டி, எல்க்ஹில் மலையில் உள்ள ஜலகண்டேஸ்வர சுவாமி மற்றும் பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது; பின், சிறப்பு பூஜைகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட தேரில், ராஜ அலங்காரத்தில் முருகப் பெருமான், நகரில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா சென்றார்.
நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று, முருகனை தரிசித்தனர். பக்தர்களுக்கு, திருமுருக கிருத்திகை சங்கத்தினர் சார்பில், அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. படுகரின மக்களின் பஜனை மற்றும் நடனம் நடந்தது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, ஷேக் அப்துல்காதர் என்பவர் மோர் வழங்கினார். விழாவில், மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், மக்கள் பங்கேற்றனர். இதேபோல, ஊட்டி எச்.எம்.டி., முனீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா நடந்தது. மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில், எம்.பாலாடாவில் ஆனந்தமலை முருகன் கோவில்களில் விழா நடந்தது.
* கோத்தகிரி சக்திமலை தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு, 12ம் தேதி, கொடியேற்றத் துடன், விழா துவங்கியது. 13ம் தேதிமுதல், 19ம் தேதிவரை, நாள்தோறும் ஐயனுக்கு சிறப்பு பூஜைகளுடன், மகாதீபாராதனை நடந்தது.திருவிழா நாளான நேற்று (ஜன., 21ல்)காலை, 5:00 மணிக்கு, சுப்ரமண்ய மூலமந்திர மாலா மந்திர ஹோமம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, மகா அபிஷேகம், 9:00 மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கோத்தகிரி சாய்குமார் மற்றும் பகவத் சைதன்யா குழுவினரின் பக்தி இன்னிசை இடம் பெற்றது. பகல், 12:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 3:00 மணிக்கு, தேர் வடப்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.பக்தர்களின் அரோகரா கோஷத்திற்கு இடையே, வெற்றிவேல் முருக பெருமான், கோவிலை சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 6:00 மணிக்கு கொடி இறக்கப்பட்டு, 6:30 மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை, சக்திசேவா சங்க தலைவர் போஜராஜன் தலைமையில், கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் மகளிர் குழுவினர் செய்திருந்தனர். இதேபோல, காத்துகுளி, நடக்கல், தேன்மலை மற்றும் பர்ன்சைடு முருகன் கோவில்களில், தேர் திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* கூடலூர், ஓவேலி சந்தனமலை முருகன் கோவிலில், அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தைபூச திருவிழா துவங்கியது. தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம், தீபாரதனை சிறப்பு பூஜைகள் நந்தது. மாலையில் கோவில் வளாகத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது.
* குஷ்மகிரி முருகன் கோவிலில், காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் சுவாமி தேர் ஊர்வலம் நடந்தது. இதில்,நந்தட்டி முருகன் கோவிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.