பதிவு செய்த நாள்
23
ஜன
2019
10:01
வேடசந்துார்: வேடசந்துார் அருகே தேவிநாயக்கன்பட்டியில், 7 வயது நிரம்பிய இளம்பெண்ணை நிலாவுக்கு மனைவியாக நினைத்து கொண்டாடும் ‘நிலாப்பெண்’ எனும் வினோத திருவிழா நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே தேவிநாயக்கன்பட்டியில் ஆண்டுதோறும் தை மாதம் பவுர்ணமி நாளில் ‘நிலாப்பெண் ’ பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுகிது.
இளம்பெண் தேர்வு: இவ்விழாவில் உடல் நலம் குன்றிய, வயதுக்கு வராத இளம் பெண் ஒருவரை, தை புவுர்ணமிக்கு 7 நாள் முன்பாக தேர்வு செய்து, அவர் நலம் பெறும் விதமாக, ‘நிலாப் பெண்ணாக’ அங்கீகரிக்கின்றனர். அவர் 3ஆண்டுகளுக்கு நிலாப்பெண்ணாக ஊரில் வலம் வருவார். அவருக்கு தினமும் ஊரில் உள்ளவர்கள் பால், பழம், கலவை சாதம் உள்ளிட்ட சத்துணவை கோயிலில் வைத்து கொடுக்கின்றனர். அதில் ஒரு பகுதியை எடுத்து நிலாவுக்கு வைத்து வணங்குவர். மீதிஉணவை பிற குழந்தைகளுடன் உண்கின்றனர். இந்தாண்டு நிலாப் பெண்ணாக ரமேஷ்- – தவமணி தம்பதியின் மகள் கனிஷ்கா 7, தேர்வு செய்யப்பட்டார்.
நிலாப்பெண் ஊர்வலம்: இவர், மாசடச்சியம்மன் கோவிலில் இருந்து, தாரை தப்பட்டை முழங்க ஊருக்கு மேல்புறம் சரளைமேடு எல்லைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு உட்கார வைத்து, ஆவாரம் பூக்களால் மாலையிட்டனர். தலையில் ஆவாரம் பூச்சூடி, ஒரு கூடை நிறைய ஆவாரம்பூவை சுமக்கச்செய்து அழைத்து வந்தனர். ஊர்வலமாக வரும்போது ஒற்றுமையாக கொண்டாட்டத்துடன் சென்றனர். பின் அப்பெண்ணை மாரியம்மன் கோவில் முன்பு உட்கார வைத்து, பெண்கள் அவரை சுற்றி பாட்டுப்பாடி கும்மியடித்தனர். பிறகு, விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு, மாசடச்சியம்மன் கோவிலுக்கு நிலாப்பெண்ணை அழைத்து வந்தனர். அங்கு தாய் மாமன்களால் கட்டப்பட்ட தென்னங்கீற்று குடிசையில் உட்கார வைத்து அவரை சுற்றி கும்மியடித்தனர். அதற்குள் அதிகாலை வந்ததும் நிலா மறைய துவங்கியது. இளம்பெண் சுமந்துவந்த ஆவாரம்பூ கூடையில் மண் சட்டியை வைத்து தீபம் ஏற்றினர். அதை நிலாப்பெண், நீர் நிறைந்த கிணற்றில் தீபத்துடன் மிதக்கவிட்டார். அதனை ஒற்றுமையாக வணங்கிவிட்டு, கலைந்து சென்றனர். இந்த விழா மூலம் அப்பெண் ஆரோக்கியமாக இருப்பதுடன், ஊர் மக்களும் ஒற்றுமையாக இருப்பர் என்பது காலம், காலமான நம்பிக்கையாக உளளது.