காஞ்சிப்பெரியவரிடம் பேட்டிக்காக வந்த பத்திரிகை நிருபர் ஒருவர், ஒலிநாடாவில் அவரது சொற்பொழிவை பதிவு செய்தார். பக்தர்கள் குழுமியிருந்தனர். சுவாமிகள் சிரித்தபடி கேள்வி ஒன்றை எழுப்பினார். ’உலகில் முதன் முதலாக குரலைப் பதிவு செய்த கருவி எது?’ விடை தெரியாததால் மவுனம் காத்தனர் பக்தர்கள். ”மகாபாரதப்போர் நடந்த போது அம்புப்படுக்கையில் படுத்திருந்தார் பிதாமகர் பீஷ்மர். அவரைச் சுற்றி பாண்டவர்கள், கிருஷ்ணர், வியாசர் இருந்தனர். இந்நிலையில் ஆயிரம் திருநாமங்களால் கிருஷ்ணரை ஸ்தோத்திரம் செய்தார் பீஷ்மர். அனைவரும் மெய் மறந்து கேட்டனர். யாருக்கும் அதைக் குறிப்பெடுக்கும் எண்ணம் வரவில்லை. சொல்லி முடித்ததும், ”அடடா... இந்த அற்புதமான சகஸ்ரநாமத்தை பதிவு செய்யவில்லையே” என வருந்தினார் தர்மர். கிருஷ்ணரிடம் வழிகாட்டுமாறு வேண்டினார். ”என்னால் என்ன செய்ய முடியும்? உங்களைப் போல பீஷ்மர் சொன்னபோது நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்” என்றார் எல்லாம் அறிந்த கிருஷ்ணர்!
” உலக நன்மைக்காக சகஸ்ரநாமத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என கோரிக்கையை மீண்டும் வைத்தனர். பக்தர் விருப்பத்திற்கு பகவான் செவி சாய்க்காமல் போவாரா என்ன? கேட்டதும் கொடுப்பவன் அல்லவா? ” உன் தம்பி சகாதேவன் ஸ்படிக மாலை அணிந்திருக்கிறான். ஒலி அலைகளைப் பதிவு செய்யும் ஆற்றல் அதற்குண்டு. அவனது மாலையிலுள்ள ஸ்படிகங்கள் சகஸ்ரநாமத்தை உள்வாங்கியுள்ளன. சகஸ்ரநாமம் சொல்லிய இப்புனிதபூமியில் அமர்ந்து சிவனை தியானித்தால் ஒலி அலையைத் திரும்ப ஸ்படிகம் எழுப்பும். அதைக் கேட்டு சகாதேவன் சொல்ல வியாசர் எழுதட்டும். இதனால் உலகமே நன்மை பெறும்” என்றார் கிருஷ்ணர். அதன்படியே சகஸ்ரநாமம் நமக்கு கிடைத்தது. இதனடிப்படையில் உலகின் முதல் ஒலிப்பதிவுக் கருவி அதாவது வாய்ஸ் ரிகார்டர் - ஸ்படிக மாலை தான். இந்த விஷயத்தை கேட்டு அனைவரும் அதிசயித்தனர். திருப்பூர் கிருஷ்ணன்