பதிவு செய்த நாள்
06
பிப்
2019
02:02
உத்தமபாளையம்:உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் பிப். 19 ல் நடக்கிறது. அதனை முன்னிட்டு ரதவீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என தாசில்தார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் தேரோட்டம் பிப். 19 ல் நடக்கிறது. அதற்கான கொடியேற்றம் பிப். 8 ல் நடக்கிறது. அன்று முதல் காலை மற்றும் மாலை என இரண்டு நேரமும், மண்டகப்படி நடக்கிறது. தேரோட்டம் அமைதியாக நடைபெறுவதற்காக தாசில்தார் உதயராணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பிடிஆர்.விஜயராஜன், ஜமாத் தலைவர் தர்வேஷ்முகையதீன், செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் , அனைத்து சமுதாய தலைவர்களும் பங்கேற்றனர்.கூட்டத்தில், தேரோட்டத்திற்கு அனைத்து சமுதாயத்தினரும் ஒத்துழைக்க வேண்டும். மண்டகப்படி
நாட்களிலும், தேரோட்டத் தன்றும் வடக்குரதவீதி, தெற்குரதவீதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் தொழுகைக்கு இடையூறு ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும், என
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சப்கலெக்டர் வைத்தியநாதன் கூறுகையில், மண்டகப்படி இரவு 10:00 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். ரதவீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்,
என்றார்.