மானாமதுரை வைகை நதி மேற்குக்கரை ஓரத்தில் கிழக்கு முகமாக ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் அமைந்துள்ளது. தனித்தனி சன்னதிகளில் சுவாமி, அம்பாள் காட்சி தருகின்றனர்.
மூலவர் சோமநாதர் சுயம்புலிங்கமாக வெள்ளை நிறத்தில் (அமர்நாத் பனிலிங்கத்தை போல) காட்சி அளிப்பது இத்தலத்தில் மட்டுமே. 64 திருவிளையாடல்களில் ஒன்றாக, மாணிக்கவாசகப் பெருமானுக்கு சிவபெருமான் அருட் கருணை புரியும் பொருட்டு நரிகளைப் பரிகளாக மாற்ற கயிறு செய்தது இந்த தலத்தில் தான்.
அகஸ்தியர் ஆலோசனைப்படி ராமபிரான் இத்தலத்தில் பூஜித்த பின்பே ராமேஸ்வரம் சென்றதாக வரலாறு. ராமருடன் வந்த வானர சேனைகள் இங்கு பசி தீர்த்து இளைப்பாறினர். அதனால் வானரவீரமதுரை என்று அழைக்கப்பட்டது. தற்போது மருவி மானாமதுரை என்றும் அழைக்கப்படுகிறது. வில்வ மரங்கள் நிறைந்து இருந்ததால் முற்காலத்தில் வில்வ வன சேத்திரம், வில்வவன காடு என்று அழைக்கப்பட்டது. இன்றும் வில்வ மரங்கள் சூழ மத்தியில் சோமநாதர் அருள்புரிகிறார்.மகாயோகி சித்த புருஷரான சதாசிவ பிரம்மேந்திராள் இத்தலத்தில் ஜோதி ரூபமாக காட்சி தந்து சமாதி அடைந்துள்ளார். அவரது சன்னதி, சோமநாதர் சன்னதிக்கு பின்புறம் உள்ளது. மேலும் இவர் சமாதி அடைந்த ஐந்து இடங்களில் இத்தலமும் ஒன்று. நர்மதை ஓரத்திலுள்ள ஓங்காரேஸ்வரம், காவிரி ஓரத்தில் உள்ள நெரூர், கங்கை ஓரத்தில் உள்ள காசி, சிந்து நதி ஓரத்தில் உள்ள கராச்சி, வைகை நதி ஓரத்தில் உள்ள மானாமதுரை ஆகியவை இவர் சமாதி அடைந்த தலங்கள்.