ஒரு படகில், ஒரு ராஜாவும், வீரனும் பயணம் செய்தனர். சுகமாகப் போய்க்கொண்டிருந்த படகு, திடீரென ஏற்பட்ட அலைகளால் தள்ளாட ஆரம்பித்தது. ராஜா கலங்காமல் இருந்தார். ஆனால், உடன் சென்ற வீரனோ, படகு கவிழ்ந்து விடுமோ என்று பயப்பட்டான். படகு கவிழாமல் இருக்க, தன்னாலான வித்தை களையெல்லாம் காண்பித்தான். ஆனாலும், இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள அவனால் முடியவில்லை. அந்த இக்கட்டான நேரத்திலும், ராஜா மட்டும் சற்றும் பயமின்றி படகில் அமர்ந்திருந்தார் “மன்னரே! இந்த இக்கட்டான சூழலிலுல், நீங்கள் மட்டும் பயப்படாமல் இருக்கிறீர்களே! எப்படி?” என்று கேட்டான். “வீரனே! நீ தன்னம்பிக்கையுடன் அலைகளை எதிர்த்து போராடி, படகை நிலைநிறுத்த முயற்சிக்கிறாய். நான், அந்த தன்னம்பிக்கையை நமக்கு தரும் கடவுளிடம் நம்மைக் காப்பாற்றும் பொறுப்பை ஒப்படைத்து, பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். மனிதனுக்கு தன்னம்பிக்கையும், பிரார்த்தனையும் இரண்டு கண்கள். நீ தொடர்ந்து போராடு. கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்,” என்றார். வீரன், இன்னும் பலமாக படகை நிலைநிறுத்த முயற்சித்தான்.