பதிவு செய்த நாள்
16
மார்
2019
01:03
கோட்டூர்:கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா, 8ம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது. கடந்த, 13ம் தேதி மாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.
அன்று மாலை, பூவோடு எடுத்து பக்தியுடன் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.நேற்று முன்தினம் (மார்ச்., 14ல்) மதியம், 12:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், இரவு, 10:00 மணிக்கு குண்டம் கட்டுதல் மற்றும் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (மார்ச்., 15ல்) காலை, 8:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், கோட்டூர், பழனியூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்கள் குண்டம் இறங்கி முடிந்ததும், பெண்கள் தாயே பராசக்தி, அம்மா பராசக்தி என சப்தமிட்டபடி, குண்டத்தில் இருந்த பூவை அள்ளிக்கொடுத்து வழிபட்டனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.குண்டம் நிகழ்வு முடிந்ததும், பக்தர்கள் கோவிலில் இருந்து, தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கோட்டூர் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று, (16ம் தேதி)காலை, 9:00 மணிக்கு தேர் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல், இரவு, 10:00 மணிக்கு வாண வேடிக்கை நடக்கிறது.