பதிவு செய்த நாள்
17
ஏப்
2019
02:04
திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் கோவில், சித்திரை தேர் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரை பெருவிழா, 10ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.வேதகிரீஸ்வரர், தினமும் காலை மற்றும் இரவில், வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளினார்.முக்கிய பிரதான விழாவான நேற்று (ஏப்., 16ல்), தேரோட்டம் விமரிசையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்களில் வேதகிரீஸ்வரர் , திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர்.
காலை, 6:00 மணிக்கு, தேரடியிலிருந்து, ஐந்து தேர்களின் வடம்பிடித்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்தனர்.பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்களால், திருக்கழுக்குன்றமே திணறியது.தேர் வரும் வீதிகளான மேட்டுதெரு, கருங்குழி சாலை, பெரிய தெரு, கம்மாளர் தெரு ஆகிய தெருக்களில் நீர், மோர், தண்ணீர், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மதியம், 1:00 மணிக்கு, ஐந்து தேர்களும் கோவில் முன்புள்ள தேரடியை வந்தடைந்தன.திருக்கழுக்குன்றம் நகருக்குள் வரும் அரசு பஸ் நிறுத்தப்பட்டு, புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. நூற்றுக்கணக்கான போலீசார், பக்தர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குமரன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.