பதிவு செய்த நாள்
08
மார்
2012
12:03
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த குண்டம் இறங்கினர். கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிக்ச்சியாக நேற்று குண்டம் இறங்குதல் நடந்தது. இக்குண்டம் 58 அடி நீளமும், மூன்றேகால் அடி அகலமும், மூன்று அடி ஆழமும் கொண்டிருந்தது. நேற்றுமுன்தினம் இரவு 7.00 மணிக்கு குண்டத்தில் பூ போடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, மாமாங்கம் ஆற்றிலிருந்து 200 பேர் பூவோடு எடுத்து வந்தனர். உடன் அம்மன் பூப்பல்லக்கில் அழைத்து வரப்பட்டது.நேற்று அதிகாலை 2.30 மணிக்கு குண்டம் இறங்குவதற்கு பூச்செண்டு, கரகம் அழைத்து வர ஆற்றுக்கு, அம்மன் பூப்பல்லக்கில் உடன் நேர்த்திக்கடன் செலுத்தும் 150 பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக உடன் சென்றனர். காலை 6.30 மணிக்கு ஆற்றில் இருந்து அம்மன் பூப்பல்லக்கிலும், சிம்மவாகனத்திலும் எழுந்தருளி கரகம், சக்தி விந்தையை கோவிலுக்கு அழைத்து வந்தனர். காலை 7.00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலில் அய்யாசாமி கோவில் பூசாரி குண்டத்திற்கு தீபாராதனை காண்பித்து, தீர்த்தம் தெளித்து கையால் அக்னியை எடுத்து பூப்போல குண்டத்தில் போட்டார். இதனை தொடர்ந்து, கரகம் எடுத்த மூன்று பேர் முதலில் குண்டம் இறங்கினர். தொடர்ந்து 150 பக்தர்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9.00 மணிக்கு சக்தி விந்தை ஆற்றில் விட அழைத்து செல்லப்பட்டது. இன்று காலை 7.00 மணி முதல் மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு குண்டம் திருவிழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை ஊர்க்கவுண்டர் சுகுமாரன், சுரேந்திரன், பரம்பரை பெரியவீட்டு கணக்குப்பிள்ளை சாமிநாதன், சத்தியநாதன் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.