பதிவு செய்த நாள்
08
மார்
2012
12:03
அவிநாசி : அவிநாசி அருகே ஆலத்தூரில் கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. அவிநாசி அருகே ஆலத்தூரில் கொங்கு சேர மன்னர்களால், 2,700 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கரிய காளியம் மன் உடனமர் மகா காளீஸ்வர சுவாமி கோவில் தொடர்ந்து பல சமூகத்தினரால் பராமரிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வந்தன. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆனதால், கோவில் சிதிலமடைந்தது. தற்போது திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 5ம் தேதி துவங்கியது. கோவிலருகே அமைக்கப்பட்ட யாகசாலையில் நான்கு கால வேள்வி பூஜைகளுக்கு பின், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தொடர்ந்து மூலவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்து சிறப்பு அபிஷேகம், பேரொளி வழிபாடு ஆகியன நடந்தன. கும்பாபிஷேக விழா பூஜை களை, பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்ற தலைவர் சென்னியப்பனார் தலைமையில், குமாரலிங்கம் உட்பட பலர் மேற்கொண்டனர். சிவகிரி ஆதீனம் சிவசமய பண்டித குருசுவாமி, பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகள், மருதமலை ஆதீனம் நாகேஸ்வர சிவம், பேரூர் மேல்மடம் ஞான சிவாச்சாரியார், மணிவாசகர் அருட்பணி மன்ற தலைவர் சென்னியப்பனார் ஆகியோர் பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கினர். அதன்பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் பாலுசாமி தலைமையில், கரிய காளியம்மன் வழிபாட்டு மன்ற அறக்கட்டளை குழுவினர், பில்லகுல கொங்கு பாலவேளாள கவுண்டர்கள், சம்பங்குல செங்குந்த முதலியார்கள், பூளுவ குல வேட்டுவ கவுண்டர்கள் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.