பதிவு செய்த நாள்
10
மே
2019
12:05
ஸ்ரீவில்லிபுத்தூர்:தினமலர் செய்தி எதிரொலியாக, சதுரகிரி மலைக் கோவிலில், இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் பனீந்திரரெட்டி ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், தனியார் அன்னதான மடங்கள் அறநிலையத் துறையினரால் மூடப்பட்டதால், பக்தர்கள், உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல், அவதிப்பட்டு வந்தனர்.இதனால், மலைப் பகுதி ஓட்டல்களில், உணவுகள், அதிக விலைக்கும், 1 லிட்டர் தண்ணீர், 40 முதல், 60 ரூபாய் வரையும் விற்கப்பட்டது. பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இது தொடர்பாக, மே, 4ல், தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்ய, இந்து அறநிலையத்துறை கமிஷனர் பனீந்திரரெட்டி, நேற்று (மே., 9ல்) காலை, 6:40 மணிக்கு, சதுரகிரி மலையடிவாரமான தாணிப்பாறை வந்தார். மாவட்ட வனஅலுவலர் முகமது ஷாபாப்புடன் ஆலோசனை நடத்தினார்.
கமிஷனர் கூறுகையில், சதுரகிரியில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக வந்த, தினமலர் செய்தியை தொடர்ந்து, நேரில் ஆய்வு செய்ய வந்துள்ளேன். பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும், என்றார்.பின், கமிஷனர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் மலையேறினர். கோவிலில் இரவு தங்கிய கமிஷனர், இன்று (மே., 10ல்) காலை திரும்புகிறார்.
பக்தர்களுக்கு பட்டினிஅதிகாரிகளுக்கு விருந்து
கடந்த வாரம், சித்திரை அமாவாசையை முன்னிட்டு, மலையேறிய பக்தர்கள், போதிய உணவு, தண்ணீரின்றி, பட்டினியுடன் கோவிலுக்கு சென்று திரும்பினர். அவர்களுக்கு அறநிலையத் துறை சார்பில், எவ்வித வசதியும் செய்து தராததால், கடும் சிரமத்திற்குள்ளாகினர்.துறையின் உயரதிகாரி ஆய்விற்கு வருகிறார் என்றதும், மினரல் வாட்டர், உணவு வகைகள், உணவு தயாரிக்க தேவையான பொருட்கள், போர்வை உட்பட பல பொருட்கள், தலைச் சுமையாக மலைக்கு எடுத்துச் செல்லபட்டன. இது, பக்தர்களிடையே மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.