பதிவு செய்த நாள்
20
மே
2019
01:05
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று (மே., 19ல்) நடந்த தீமிதி விழாவில், காலை யில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.
திருத்தணி பழைய திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, 2ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கியது. நேற்று (மே., 19ல்), 18ம் நாளில், காலை, 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், துரியோதனன் படுகளம் நடந்தது. நிகழ்ச்சியில், துரியோதனன் படுகளம் பகுதிக்கு, இழுத்து வந்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின், துரியோதனன் ரத்தத்தால் திரவுபதியம்மன் கூந்தல் முடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். சிலர், ஆடு, கோழி பலியிட்டும் வழிபட்டனர்.காலை, 11:50 மணிக்கு, அக்னி குண்டத்தில் தீ மூட்டும் நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு, பூ கரகம் ஊர்வலத்துடன், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீமிதித்தனர்.பின், உற்சவர் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி, டி.எஸ்.பி., சேகர் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (மே., 20ல்) காலை, 11:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த, கல்வாய் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று (மே., 19ல்) காலை, 7:00 மணியிலிருந்து, காலை, 11:00 மணி வரை, துரியோதனன் படுகளம் நடைபெற்றது.