ரத்னாகரர் என்பவர் தீயவழிகளில் ஈடுபட்டு பொருள் சேர்த்தார். ஒருமுறை ஏழு ரிஷிகளை மறித்தார். அவர்களில் ஒரு ரிஷி “அப்பனே! பொருள் வேண்டியா எங்களைத் தடுத்தாய். பொருள் இல்லாதவன் தான் உலகில் நிம்மதியாக இருக்க முடியும் என்ற ஞானம் அறிந்த ரிஷிகள் நாங்கள். உணவு கூட அன்றாடம் கிடைத்தால் உண்போம். இல்லாவிட்டால் பட்டினியாய் இருப்போம்.
அது சரி...எதற்காக திருடுகிறாய்?” என்று கேட்டார்.“சுவாமி! என் குடும்பம் மிகப்பெரியது. அவர்களுக்கு உணவிடவே திருடுகிறேன்,” என்றார் ரத்னாகரர். “குடும்பம் பெரிது என்பதற்காக திருடி பிழைப்பது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா! உன்னிடம் பொருளை இழக்கும் குடும்பம் விடும் சாபம், உன்னை ஏழேழு ஜென்மத்திற்கும் தொடர்ந்து வந்து வருத்தும்,” என்ற முனிவர்களிடம், “நான் என்ன தான் செய்ய!” என கேட்டார் ரத்னாகரர். “ரத்னகரா! நீ உனக்கு சேரும் பாவத்தை உன் குடும்பத்தினருக்கு பங்கிட்டு தருவதாகச் சொல். அவர்கள் பதில் சொல்வதைப் பொறுத்து முடிவெடு” என்றார்கள். ரத்னாகரரும் அவ்வாறே செய்ய குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். தன்னை பணத்துக்காக மட்டுமே தன் குடும்பத்தினர் பயன்படுத்துகின்றனர் என்று உணர்ந்தவர் அந்த தொழிலை விட்டு விட்டார். பின், ரிஷிகளிடமே திரும்பி அவர்கள் மூலம் ‘ராம’ மந்திரத்தை உபதேசம் பெற்றார். கல்வியறிவற்ற அவர் ‘மரா..மரா’ என்று சொல்ல ஆரம்பித்தார். அதை வேகமாகச் சொல்லும்போது ‘ராம ராம ராம’ என்றே ஒலித்தது. பின், ரத்னாகரர் தவமிருந்தார். புற்று அவரை மூடியது. ‘வால்மீகம்’ என்றால் ‘புற்று’. அதனால் ‘வால்மீகி’ என்ற பெயர் பெற்று ராமாயண காவியத்தை எழுதும் பாக்கியம் பெற்றார்.