பதிவு செய்த நாள்
19
மார்
2012
04:03
என்ன தான் உழைத்தாலும், கையில் பணம் தங்குவதில்லை. உடல்நிலை போன்ற பல பிரச்னைகளால் விரயமாகியும் விடுகிறது. அப்படிப்பட்டவர்கள், இந்தப் பதிகத்தைப் பாடலாம். ஞானசம்பந்தர் அருளியது இது.
1. இடரினும் தளரினும் எனது உறுநோய்
தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே.
2. வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்;
தாழ்இளம் தடம்புனல் தயங்கு சென்னி
போழ் இளமதி வைத்த புண்ணியனே.
3. நனவினும் கனவினும் நம்பா, உன்னை
மனவினும் வழிபடல் மறவேன், அம்மான்
புனல்வரி நறுங்கொன்றைப் போது அணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே.
4. தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடிஅலால், அரற்றாது என்றா;
கைம்மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே.
5. கையது வீழினும் கழிவு உறினும்
செய்கழல் அடிஅலால் சிந்தை செய்யேன்
கொய் அணி நறுமலர் குலாய சென்னி
மைஅணி மிடறு உடை மறையவனே!
6. வெந்துயர் தோன்றி ஓர் வெருஉறினும்
எந்தாய், உன் அடியலால் ஏத்தாது என் நா;
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்தவெண் பொடிஅணி சங்கரனே.
7. வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்
அப்பா உன் அடிஅலால் அரற்றாது; என் நா;
ஒப்புடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே.
8. பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும்
சீர்உடைக்கழல் அலால், சிந்தை செய்யேன்;
ஏர் உடை மணிமுடி ராவணனை
ஆர் இடர்பட வரை அடர்த்தவனே.
9. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடிஅலால் உரையாது என் நா;
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பரிது ஆயவனே.
10. பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்
அத்தா உன் அடி அலால் அரற்றாது என் நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்க
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே!
11. அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேல்படை எம் இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலை வல்லார்
வினை ஆயின நீங்கிப்போய் விண்ணவர்
வியனுலகம்
நிலையாக முன்னேறுவர்; நிலைமிசை
நிலை இலரே.