கம்ஹாசுரன் என்பவன் தேவர்களைத் துன்புறுத்த, பார்வதியின் உதவியை நாடினர். திரிபுர பைரவியாக மாறிய அவள், கோபத்துடன் வதம் செய்ய புறப்பட்டாள். விஷயம் அறிந்த அசுரன், சாகாவரம் பெற சிவனை நோக்கி தவம் செய்தான். அவன் எதுவும் கேட்க முடியாமல், ஊமையாகும்படி சபித்தாள் பார்வதி. அதன்பின் அசுரன் ’மூகாசுரன்’ எனப்பட்டான். ’மூகன்’ என்பதற்கு ’ஊமை’ என பொருள். மூர்க்க குணத்துடன் திரிந்த அசுரனை அழித்த பார்வதி ’மூகாம்பிகை’ என பெயர் பெற்றாள். கர்நாடக மாநிலம் கொல்லூரில் புகழ் மிக்க மூகாம்பிகை கோயில் உள்ளது. ஆதிசங்கரர் இங்கு பஞ்சலோக சிலையை பிரதிஷ்டை செய்ததோடு, ’சவுந்தர்யலஹரி’ என்னும் ஸ்தோத்திரம் பாடினார். ’சவுந்தர்ய லஹரி’ என்பதற்கு ’அழகுக்கலை’ என்பது பொருள். அழகின் தாயகமாக விளங்கும் அம்பிகையை இந்த ஸ்தோத்திரம் சொல்லி வழிபட நிறைவான வாழ்வு அமையும்.