பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
12:07
அன்னுார்:பிள்ளையப்பம்பாளையத்தில், பழமையான செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகவிழாவில், 25 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
பிள்ளையப்பம்பாளையத்தில், 603 ஆண்டு பழமையான செல்வநாயகியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் செப்பு தகடு பொருத்தி, திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.
கும்பாபிஷேக விழா, 7ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. ஆறு கால வேள்வி பூஜை தமிழ் முறைப்படி நடந்தது.நேற்று (ஜூலை., 11ல்), காலையில், வேள்வி சாலையிலிருந்து புனித நீர் கலசங்கள் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டன. விநாயகர், முருகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காலை 9:45 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. காலை 10:15 மணிக்கு, கருவறை விமானத்துக்கும், பின்னர், செல்வநாயகி அம்மனுக்கும் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மயிலம், பொம்மபுரம் ஆதீனம், சிவஞானபாளைய சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகள், வரப்பாளையம், திருநாவுக்கரசு மடம் சிவாச்சல சுவாமிகள் அருளுரை வழங்கினர்.
பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, அன்னுார் உட்பட கோவை, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து, பலஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் அம்மன் திருவீதி உலா நடந்தது. மாலையில் பிள்ளையப்பம் பாளையத்துக்கு, செல்வநாயகியம்மன் திருத்தேர் உலா நடந்தது. பக்தர்களுக்கு இலவச மரக்கன்று வழங்கப்பட்டன.