பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
10:07
புதுச்சேரி : பிரசித்தி பெற்ற காரைக்கல் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடந்தது. சிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ளது இந்த காரைக்கால் அம்மையார் கோவில். இங்கு ஆண்டுதோறும் இந்த மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த விழா இன்று (ஜூலை 16) வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. பக்தர்கள் ஒருவருக்கொருவர் மாங்கனிகளை வாரியிறைத்து உற்சாகமாக கொண்டாடினர். பேயுருவம் பெற்ற அன்னை, 63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையார். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 11 பாடல்கள், திருவிரட்டை மணிமாலை 20 பாடல்கள், அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள் என இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை.
இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா இன்று காலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. நாளை பரமதத்தருக்கும், ஸ்ரீபுனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.
முத்துச்சிவிகை வீதியுலா : பின்னர், ஈசன் பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி உலா நடைபெறும். இரவு புனிதவதியாரும், பரமதத்தரும் தம்பதிகளாக முத்துச் சிவிகையில் வீதியுலா வருவர். பிச்சாண்டவர் மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கும்.
மாங்கனி வீசி வழிபாடு: பரமசிவன் அடியார் கோலத்துடன் பவளக்கால் விமானத்தில் அமர்ந்து வீதியுலா நடக்கிறது. காலை 7 மணிக்கு ஈஸ்வரன், காரைக்கால் அம்மையிடம் பிட்சை வாங்கி உண்ட சிவனடியார் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் புறப்பட்டு திருவீதி உலா சென்றார். அப்போது நகரெங்கும் கூடியிருக்கும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைத்து அருள்பெற்றனர். குழந்தை வரம் கிடைக்கும் இந்த விழாவில் கலந்துகொண்டு மாங்கனி பெறுபவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. பின்னர் மாலையில், ஈசனுக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.