பணம், படிப்பு பற்றி மனிதர்கள் கர்வம் கொள்ள கூடாது என்பதை சவுந்தர்ய லஹரி மூலம் பக்தர்களுக்கு விளக்கினார் காஞ்சிப்பெரியவர்.’ஆதிசங்கரர் எழுதிய நூல் சவுந்தர்ய லஹரி. இதற்கு இணையான கவிதை வேறு கிடையாது. அழகின் வர்ணனையாக இந்நூல் இருப்பதால்’சவுந்தர்ய லஹரி’ என்னும் பெயர் வந்தது. பொக்கிஷமாக ஒரு படைப்பை எழுதினாலும் சிறு கர்வமும் அவருக்கு இல்லை. இதன் ௧௦௦வது ஸ்லோகத்தில் உள்ள உவமைகள் இந்த உண்மையை எடுத்துச் சொல்கின்றன. “அம்மா! வாக்கின் வடிவமாக இருக்கும் உன்னை வாக்கினால் நான் துதிக்கிறேனே? இது சூரியனுக்கு கற்பூர ஆரத்தி காட்டுவது போல அல்லவா உள்ளது. ஒளி வெள்ளமான சூரியனுக்கு கற்பூரம் காட்டி பிரகாசப்படுத்த முடியுமா? சூரிய ஒளியில் கற்பூர ஒளி மங்கி விடும் தானே!
இரண்டாவது உவமையாக’சந்திரகாந்தக் கல்லானது சந்திரனுக்கு அர்க்கியம் (கடவுளுக்கு நீரால் செய்யும் வழிபாடு) விட நினைப்பது மாதிரி’ என்கிறார். சந்திர காந்தம் என்னும் கல், சந்திரனின் ஒளியைத் தன்னுள் வாங்கி அதை நீராக வெளிப்படுத்தும். அதனிடமுள்ள நீர் அனைத்தும், சந்திரனின் ஒளியில் இருந்து பெற்றது தானே! அப்படியிருக்க அதையே சந்திரனுக்கு அர்க்கியமாக்கினால் வேடிக்கையாகத் தானே இருக்கும்? மூன்றாவது உதாரணம்,’கடல்நீர் கையில் எடுத்து கடலுக்கு நீராட்டுவது போல’ என்கிறார். ராமேஸ்வரம் சேதுக்கரையில் பக்தர்கள் செய்வார்கள். அப்போது கடலிலிருந்தே தண்ணீர் எடுத்து கடலையே நீராட்டுவதாக வழிபடுவர். இது நகைப்புக்குரிய செயல் தானே! வாக்குக்கு கடலாக இருக்கும் அம்பிகையை வாக்கினால் துதிப்பது அப்படிப்பட்டது தானே?
இப்படி பெருமைப்படுவதற்கு ஏதுமில்லை. இந்த நூல் முழுவதும் அம்பிகை பற்றி அம்பிகையே சொன்னது என அடக்கமுடன் தெரிவிக்கிறார். அவதார புருஷரான ஆதிசங்கரரே இப்படி அடக்கமுடன் இருக்கும்போது சிறு செயல்களைச் செய்து விட்டு’நான் தான் பெரியவன்’ என மனதில் எண்ணுவது கூடாது. சங்கரர் காட்டிய நல்வழியில் அடக்கத்துடன் நாம் வாழ வேண்டும்” என்றார். - திருப்பூர் கிருஷ்ணன்