Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1.அறிவைத் தேடி 3. பிராண சக்தியின் செயல்கள்
முதல் பக்கம் » பிரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி)
2. பிராண சக்தியின் மகிமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2012
04:03

ஆகாசம், பிராணன் ஆகிய இரண்டும் முதலில் படைக்கப்பட்டன 1:4. அனைத்துப் பொருட்களாவும் ஆகியிருப்பது ஆகாசம். ஆகாசத்தைப் பொருட்களாக ஆக்கியதும், அவற்றை இயக்குவதும் பிராணன். புறத்தில் காணும் இயற்கையும், அதுபோலவே உடல், மன இயக்கங்களும் அனைத்தும் பிராண சக்தியின் மகிமையே, பிராண சக்தியின் மகிமை பல்வேறு விதமாக இங்கே கூறப்படுகிறது.

நாம் யாரைச் சார்ந்தவர்கள்?

1. அத ஹைனம் பார்க்கவோ வைதர்பி பப்ரச்ச
பகவன் கத்யேவ தேவா ப்ரஜாம் விதாரயந்தே? கதர ஏதத் ப்ரகாசயந்தே?
க புனரேஷாம் வரிஷ்ட்ட இதி

அத ஹ-அடுத்ததாக; வைதர்பி-விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த; பார்கவ-பார்க்கவன்; பப்ரச்ச-கேட்டார்; பகவன்-தெய்வ முனிவரே; ப்ரஜாம்-ஒருவனை; கதி ஏவ-எத்தனை; தேவா-தேவர்கள்; விதாரயந்தே-தாங்குகின்றனர். கதரே-அவர்களில் யார்; ஏதத்-இதனை; ப்ரகாசயந்தே-இயக்குகின்றனர்; புன-மேலும்; ஏஷாம்-இவர்களில்; க-யார்; வரிஷ்ட்ட-முக்கியமானவர்; இதி-என்று.

பொருள் : அடுத்ததாக விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்க்கவன் பிப்பலாத முனிவரிடம் கேட்டார்:  தெய்வ முனிவரே! ஒருவனை எத்தனை தேவர்கள் தாங்குகின்றனர்? அவர்களில் யார்யார் இவற்றை இயக்குகின்றனர்? இவர்களில் யார் முக்கியமானவர்?

மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் தனி மனிதர்கள் என்று தோன்றலாம். ஆனால் சற்றே சிந்தித்துப் பார்க்கும் போது, நமது வாழ்க்கை எத்தனையோ புற, அக சக்திகளுடன் பிணைந்துள்ளது தெரியவரும். கண், காது போன்ற புலன்களாலும் மனத்தாலும் நாம் அனுபவங்களைப் பெறுகிறோம். இந்தப் புலன்கள் மட்டுமே நமக்கு அனுபவங்களைத் தந்துவிட முடியுமா? முடியாது. நமது பங்குடன் இயற்கையின் பங்கும் சேர்ந்தால் தான் நாம் எந்த அனுபவத்தையும் பெற முடியும்.

உதாரணமாக, கண்களை எடுத்துக் கொள்வோம். நாம் உண்கின்ற உணவிலிருந்து பெறப்படுகின்ற பிராண சக்தியால் கண்கள் பார்ப்பதற்கான ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அதேவேளையில் சூரிய சக்தியாலோ மின்சாரத்தாலோ அங்கே ஒளியும் இருக்க வேண்டும். இரண்டும் சேரும்போது மட்டுமே நம்மால் பார்க்க முடியும். இவ்வாறே ஒவ்வொரு புலனும். அக சக்தியும் இணையும்போது மட்டுமே நமது அனுபவம் முழுமை பெறுகிறது.

காண்கின்ற புற உலகை இயக்குகின்ற தூல சக்திகளாயினும் சரி, காணாத அக உலகை இயக்குகின்ற சூட்சம சக்திகளாயினும் சரி ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தெய்வமாகக் கண்டனர் உபநிஷத ரிஷிகள். இந்த தெய்வங்கள் அபிமானி தேவதை எனப்பட்டனர். ஒவ்வொரு தேவதையும் பிரபஞ்சத்தில் ஒன்றையும் மனிதனில் ஒன்றையும் இயக்குவதாகக் கொள்ளப்பட்டனர். உதாரணமாக சூரியனுக்கும் கண்ணுக்கும் அபிமானி தேவதை அர்யமான்(3:8 விளக்கவுரையும் காண்க)

இவ்வாறு எத்தனை தேவர்கள் அல்லது தேவதைகள் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறார்கள், யார் முக்கியமானவர் என்பது கேள்வி.

நமது வாழ்க்கைக்கு ஆதாரமானவர்கள் : கதை 2-4

பார்க்கவனின் கேள்விக்கான விடையை ஒரு கதைபோல் தருகிறார் பிப்பலாத முனிவர்.

2. தஸ்மை ஸ ஹோவாச ஆகாசோ ஹ வா ஏஷ தேவோ வாயுரக்னிராப ப்ருதிவீ வாங்மனச்சக்ஷú; ச்ரோத்ரம் ச
தே ப்ரகாச்யாபிவதந்தி வயமேதத் பாணமவஷ்ட்டப்ய விதாரயாம

தஸ்மை-அவரிடம்; ஸ-பிப்பலாதர்; உவாச ஹ-கூறினார்; ஏஷ-இந்த; தேவ-தேவர்; ஆகாச-ஆகாசம்; வாயு-காற்று; அக்னி-நெருப்பு; ஆப-தண்ணீர்; ப்ருதிவீ-பூமி; வாக்-பேச்சு; மன-மனம்; சக்ஷú-பார்வை; ச்ரோத்ரம்-கேட்கும் தன்மை; தே-அவை; ப்ரகாச்ய-இயக்கி; அபிவதந்தி-கூறின; வயம்-நாங்கள்; ஏதத்-இந்த; பாணம்-உடம்பை; அவஷ்ட்டப்ய-ஒருங்கிணைத்து; விதாரயாம-தாங்குகிறோம்.

பொருள் : பிப்பலாத முனிவர் பார்க்கவனிடம் கூறினார்: ஆகாசம், காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி, பேச்சு, மனம், பார்வை, கேட்கும் தன்மை ஆகியவையே அந்த தேவர்கள். அவர்களே மனிதனை இயக்குகிறார்கள். ஒருமுறை இந்த தேவ சக்திகள், நாங்கள்தான் இந்த உடம்பை ஒருங்கிணைத்துத் தாங்குகிறோம் என்று கூறின.

மனித வாழ்விற்கு ஆதாரமான 9 தேவ சக்திகளை இங்கே பிப்பலாத முனிவர் குறிப்பிடுகிறார். ஆகாசம் அல்லது வெளி முதல் பூமி வரையுள்ள முதல் ஐந்து சக்திகளும் தூலமானவை. இவற்றால் நம் உடம்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. பேச்சு, மனம் போன்ற நான்கும் நுண் சக்திகள். இந்த 9 சக்திகளும் நமது வாழ்க்கையை இயக்குகின்றன என்கிறார் முனிவர்.

இந்த 9 சக்திகளும் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளன என்பதை விளக்குவதற்கு இரண்டு வார்த்தைகளை இந்த மந்திரத்தில் காண்கிறோம். ஒன்று, ஒருங்கிணைத்தல்(அவஷ்ட்டப்ய); மற்றது இயக்குதல் (விதாரயாம) நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்கள், நூல் இல்லாவிட்டால் எப்படி சிதறிப்போகுமோ அப்படி இந்தச் சக்திகள் இல்லாவிட்டால் நமது உடம்பும் சிதறிப்போகும். உண்மையில் இந்தச் சக்திகள்தான் நமது உடம்பை ஒருங்கிணைத்து வைத்திருக்கின்றன. இது இந்த தேவ சக்திகளின் முதற்பணி. இரண்டாவதாக, நமது உடம்பை இயக்குவதும் இந்த தேவ சக்திகளே.

பார்க்கவனின் கேள்விக்கான விடையின் முதற்படி இது. தாம் கூறியதை விளக்குவதற்காக இந்தக் கருத்தை ஒரு கதையாகத் தொடர்கிறார் பிப்பலாத முனிவர்.

3. தான் வரிஷ்ட்ட ப்ராண உவாச
மா மோஹமாபத்யத அஹமேவைதத் பஞ்சதாத்மானம் ப்ரவிபஜ்யைதத் பாணம்
அவஷ்ட்டப்ய விதாரயாமீதி தேச்ரத்ததானா பபூவு

தான்-அவற்றில்; வரிஷ்ட்ட-முக்கியமான; ப்ராண-பிராணன்; உவாச-கூறியது; மோஹம்-குழப்பத்தில்; மா ஆபத்யத-ஆழ்ந்து போகாதீர்கள்; அஹம் ஏவ-நானே; ஆத்மானம்-என்னை; பஞ்சதா-ஐந்தாக; ப்ரவிபஜ்ய-பகுத்துக் கொண்டு; ஏதத்-இந்த; பாணம்-உடம்பை; அவஷ்ட்டப்ய-ஒருங்கிணைத்து; விதாரயாமி-தாங்குகிறேன்; இதி-என்று; தே-அவை; அச்ரத்ததானா;பபூவு-நம்பவில்லை.

பொருள் : தேவ சக்திகள் கூறியதை கேட்ட முக்கியப் பிராணன் அவற்றிடம், குழம்பாதீர்கள். என்னை ஐந்தாகப் பிரித்துக்கொண்டு, இந்த உடம்பை ஒருங்கிணைத்து இயக்குவது நானே, என்று கூறியது. ஆனால் பிராணனின் பேச்சை அந்த தேவ சக்திகள் நம்பவில்லை.

மின்சாரத்தால் விளக்குகள் எரிவதைக் காண்கிறோம்; விசிறிகள் சுழல்வதைக் காண்கிறோம்; இன்னும் பல இயக்கங்களைக் காண்கிறோம். ஆனால் மின்சாரத்தை நாம் காண்பதில்லை. அதுபோல் இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ இயக்கங்களைக் காண்கிறோம். பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உயிரினங்கள் தோன்றுகின்றன, மறைகின்றன, தீ எரிகிறது, தண்ணீர் ஓடுகிறது, சூரியன் உதிக்கிறது. இவ்வாறு எத்தனையோ செயல்களைக் காண்கிறோம். இதற்குக் காரணமான சக்தியை நாம் காண்பதில்லை. அதுவே பிராண சக்தி. இந்தப் பிராண சக்தியே நம்முள் நமது உடம்பையும் மனத்தையும் இயக்குகின்ற பிராணனாகச் செயல்படுகிறது. பிராணனின் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு ஐந்து விதமாகப் பிரிக்கப்படுகிறது.(இது 3:4-10-இல் விரிவாக விளக்கப்படுகிறது).

உடம்பு, மனம் ஆகியவற்றின் இயக்கங்களுக்குக் காரணமாக இருப்பது, இன்னும் சொல்லப் போனால், இயக்கங்கள் அனைத்திற்கும் வேண்டிய ஆற்றலை அளிப்பது பிராணன். எனவேதான், தானே அனைத்தையும் இயக்குவதாக இங்கே பிராணன் கூறுகிறது.

4. ஸோபிமானாதூர்த்வமுத்க்ரமத இவ தஸ்மினுத்க்ராமதி அதேதரே
ஸர்வ ஏவோத்க்ராமந்தே தஸ்மின்ச்ச ப்ரதிஷ்ட்டமானே ஸர்வ ஏவ ப்ராதிஷ்ட்டந்தே
தத்யதா மக்ஷிகா மதுகர ராஜானமுத்க்ராமந்தம் ஸர்வ ஏவோத்க்ராமந்தே தஸ்மின்ச்ச ப்ரதிஷ்ட்டமானே
ஸர்வா ப்ராதிஷ்ட்டந்த ஏவம் வாங்மனச் சக்ஷúச்ரோத்ரம் ச தே ப்ரீதா ப்ராணம் ஸ்துன்வந்தி

ஸ-அது; அபிமானாத்-பெருமையுடன்; ஊர்த்வம்-மேலே; உத்க்ரமதே இவ-வெளியேறுவதுபோல்; தஸ்மின்-அது; உத்க்ரமதி அத-வெளியேறிய உடனே; இதரே-மற்ற; ஸர்வே ஏவ-அனைத்தும்; உத்க்ராமந்தே-வெளியேறின; தஸ்மின் ச-அது; ப்ரதிஷ்ட்டமானே-நிலைபெற்றதும்; ஸர்வே ஏவ-அனைத்தும்; ப்ராதிஷ்ட்டந்தே-நிலைபெற்றன; தத் யதா-எப்படி; மதுகர ராஜானம்-அரச தேனீ; உத்க்ரமாந்தம்-வெளியேறியதும்; ஸர்வே ஏவ-வெளியேறுகின்றனவோ; தஸ்மின் ச-அது; ப்ரதிஷ்ட்டமானே-அமர்ந்ததும்; ஸர்வே ஏவ-அனைத்தும்; ப்ராதிஷ்ட்டந்தே-அமர்கின்றனவோ; ஏவம்-அதுபோல்; வாக்-பேச்சு; மன-மனம்; சக்ஷú-கண்; ச்ரோத்ரம் ச-காது; தே-அவை; ப்ரீதா-மகிழ்ச்சியுடன்; ப்ராணம்-பிராணனை; ஸ்துன்வந்தி-துதித்தன.

பொருள் : பிராணன் தன் பெருமையை விளக்குவதற்காக வெளியேறுவதுபோல் காட்டியது. அது வெளியேறியதும் மற்ற புலன்கள் அனைத்தும் செயலிழந்து விட்டன. அது நிலைபெற்றதும் அனைத்தும் செயல் படத் தொடங்கின. அரச தேனீ வெளியேறினால் மற்ற தேனீக்கள் அனைத்தும் எப்படி அதைத் தொடர்ந்து வெளியேறுகின்றனவோ, அது அமர்ந்தால் எப்படி அனைத்தும் அமர்கின்றனவோ அப்படி இது நிகழ்ந்தது. உடனே பேச்சு, மனம், கண், காது போன்ற மற்ற புலன்கள் மகிழ்ச்சியுடன் பிராணனைத் துதித்தன.

பல வடிவங்களில், பல நிறங்களில் பல்புகள் எரிகின்றன; மின்விசிறிகள் சுழல்கின்றன; குளிர்பதனப் பெட்டி குளிரச் செய்கிறது; மின் அடுப்பு வெப்பத்தைத் தருகிறது. ஆனால் இவை அனைத்தும் மின்சாரம் இருக்கும் வரைதான். மின்சாரம் விடைபெற்றால் இவை அனைத்தின் இயக்கங்களும் நின்றுவிடும். அதுபோலவே பிராண சக்தி இருக்கும் வரை மட்டுமே கண்களும், காதுகளும் மற்ற புலன்களும் அனைத்தும் வேலை செய்யும். பிராணன் விடைபெற்றால் அனைத்தின் இயக்கமும் நின்றுவிடும். மரணவேளையில் நிகழ்வது இதுவே. பிராணன் வெளியேறிய பின் உடம்பு கட்டைபோல் ஆகிவிடுகிறது. எனவே நான், நீ என்று போட்டியிட்ட புலன்கள், பிராணன் வெளியேறினால் தங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டன; அதன் மகிமையைத் துதிக்கலாயின.

பிராணனின் மகிமை : 5-13

புலன்கள் பிராணனைத் துதிப்பது போல், தொடரும் 9 மந்திரங்கள் பிராணனின் மகிமையைக் கூறுகின்றன.

5. ஏ÷ஷாக்னிஸ்தபத்யேஷ ஸூர்ய ஏஷ பர்ஜன்யோ மகவானேஷ வாயு
ஏஷ ப்ருதிவீ ரயிர்தேவ ஸதசச்சாம்ருதம் ச யத்

ஏஷ-இது; அக்னி-நெருப்பு; தபதி-எரிகிறது; ஸூர்ய-சூரியன்; பர்ஜன்ய-மேகம்; மகவான்-இந்திரன்; வாயு-காற்று; ப்ருதிவீ-பூமி; ரயி-ஜடப்பொருள்; தேவ:- தேவ சக்தி; ஸத்-தூலப் பொருட்கள்; அஸத்-நுண் பொருட்கள்; யத் ச-எது; அம்ருதம்-அமுதம்.

பொருள் : பிராணனே நெருப்பாக எரிகிறது. சூரியன், மேகம், இந்திரன், வாயு, காற்று, பூமி, ஜடப்பொருள் ஆகிய அனைத்துமாக விளங்குவது பிராணனே. அந்த தேவ சக்தியே தூலப் பொருட்களாகவும் நுண் பொருட்களாகவும் அமுதமாகவும் விளங்குகிறது.

சூரியன், மேகம் என்று இங்கே கூறப்பட்டுள்ள அனைத்தும் இயற்கை சக்திகளின் வடிவம். அந்த சக்திகள் இயக்குவதற்குக் காரணமான பிராணன் விளங்குகிறது. அதையே இந்த மந்திரம் விளக்குகிறது. அமுதம் என்றால் தேவர்கள் நிலைபெறக் காரணமானது (தேவானாம் ஸ்திதி காரணம்) என்று விளக்குகிறார் ஸ்ரீசங்கரர். தேவர்கள் என்பவர்கள் இயற்கை சக்திகள். அவை இயங்க வேண்டுமானால் பிராணன் வேண்டும். அதனால்தான் இங்கே பிராணன் அமுதம் என்று கூறப்பட்டுள்ளது.

6. அரா இவ ராநாபௌ ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்ட்டிதம்
ரிசோ யஜூம்ஷி ஸாமானி யஜ்ஞ க்ஷத்ரம் ப்ரஹ்ம ச

ரத நாபௌ-தேர்ச்சக்கரத்தின் அச்சில்; அரா இவ-ஆரக்கால்கள் கூடுவதுபோல்; ப்ராணே-பிராணனில்; ஸர்வம்-அனைத்தும்; ப்ரதிஷ்ட்டிதம்-நிலைபெற்றுள்ளன; ரிச-ரிக் வேதம்; யஜூம்ஷி-யஜுர் வேதம்; ஸாமானி-சாம வேதம்; யஜ்ஞ-வேள்வி; க்ஷத்ரம்-வீரம்; ப்ரஹ்ம ச-அறிவு.

பொருள் : தேர்ச்சக்கரத்தின் அச்சில் ஆரக்கால்கள் கூடுவது போல் ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், வேள்வி, வீரம், அறிவு என்று அனைத்தும் பிராணனில் நிலைபெற்றுள்ளன.

வேதங்களைப் படிக்க வேண்டுமானாலும் புரிந்து கொள்ள வேண்டுமானாலும் பிராணன் வேண்டும். பிராண சக்தி இல்லாமல் வேதங்களை ஓத முடியாது,
வேள்வி என்பது இறைவனுடன் நாம் தொடர்பு கொள்வதற்கான ஒரு வழி, அதாவது இறைநெறி. இறைநெறியில் செல்ல வேண்டுமானால் அதற்கும் பிராணன் வேண்டும். வீரம் உடம்பின் ஆற்றல், அறிவு மனத்தின் ஆற்றல். உடம்பு, மனம் இரண்டையும் இயக்குவது பிராணன். எனவே வீரமும் அறிவும் பிராணனில் நிலைபெற்றுள்ளன.

7. ப்ரஜாபதிச்சரஸி கர்ப்பே த்வமேவ ப்ரதிஜாயஸே
துப்யம் ப்ராண ப்ரஜாஸ்த்விமா பலிம் ஹரந்தி ய ப்ராணை ப்ரதிதிஷ்ட்டஸி

கர்ப்பே-கருவில்; ப்ரஜாபதி-உயிராக; சரஸி-இயங்குவது; த்வம் ஏவ-நீயே; ப்ரதிஜாயஸே-பெற்றோரின் பிரதிபிம்பமாக பிறப்பது; ப்ராண-பிராணனே; இமா-இந்த; ப்ரஜா; து-உயிரினங்கள்; பலிம்-ஆஹுதிகளை; துப்யம்-உனக்கு; ஹரந்தி-கொண்டுவருகின்றன; ய-யார்; ப்ராணை-புலன்களுடன்; ப்ரதிதிஷ்ட்டஸி-நிலை பெற்றுள்ளாய்.

பொருள் : பிராணனே! கருவில் உயிராக இயங்குவது நீயே. பெற்றோரின் பிரதிபிம்பமாகப் பிள்ளை வடிவில் பிறப்பதும் நீயே. உயிரினங்கள்(புலன்களின் மூலம்) உனக்கு ஆஹுதிகளைக் கொண்டு வருகின்றன. புலன்களில் நிலைபெற்றுள்ளதும் நீயே.

பிராண சக்தியே அனைத்திற்கும் ஆதாரம் என்பது மீண்டும் இங்கே வலியுறுத்தப்படுகிறது. ஆணில் விந்துவாகவும் பெண்ணில் கருவாகவும் இருப்பது பிராணனே. பெற்றோருடைய சாயலில் பிள்ளையாகப் பிறப்பதும் பிராணனே. உடம்பில் உயிராக இருந்து உலகை அனுபவிப்பதும் பிராணனே. பிராணன் உலகை அனுபவிப்பதற்குப் புலன்கள் அனுபவங்களைக் கொண்டு வருகின்றன. அந்தப் புலன்களை இயக்குவதும் பிராணனே.

8. தேவானாமஸி வஹ்னிதம பித்ரூணாம் ப்ரதமா ஸ்வதா
ரிஷீணாம் சரிதம் ஸத்யமதர்வாங்கிரஸாமஸி

தேவானாம்-தேவர்களுக்கு; வஹ்னிதம-மிகச் சிறந்த தூதன்; அஸி-இருக்கிறாய்; பித்ரூணாம்-இறந்த முன்னோர்களுக்கு; ப்ரதமா-முதல்; ஸ்வதா-உணவாக; அதர்வாங்கிரஸாம் ரிஷீணாம்-அதர்வாங்கிரஸ முனிவர்களில்; ஸத்யம்-உண்மையான; சரிதம்-முயற்சியாக; அஸி-இருக்கிறாய்.

பொருள் : பிராணனே! தேவர்களுக்கு மிகச்சிறந்த தூதனாகவும், இறந்த முன்னோர்களுக்கு முதல் உணவாகவும், அதர்வாங்கிரஸ முனிவர்களில் உண்மையான முயற்சியாகவும் நீயே இருக்கிறாய்.

யாக அக்கினியில் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆஹுதிப் பொருட்களை உரிய தேவர்களிடம் சேர்ப்பிக்கின்ற புரோகிதனாக அக்கினி தேவன் கருதப்படுகிறான் (அக்னிம் ஈளே புரோஹிதம்-ரிக் வேதம்) அக்கினிக்கு ஆற்றலை அளிப்பது பிராணன் (5). எனவே  ஆஹுதிப் பொருட்களைக் கொண்டு செல்கின்ற தூதனாக பிராணன் இங்கே கூறப்படுகிறது.

இறந்த முன்னோர்களை உத்தேசித்துப் செய்யப்படுகின்ற நாந்தீமுகம் என்ற கிரியை இங்கே கூறப்படுகிறது. இந்தக் கிரியை தேவர்களுக்குச் செய்யப்படுகின்ற கிரியைகளுக்கும் முன்பாகச் செய்யப்படுகிறது. தேவர்களுக்கு ஆஹுதி அளிக்கும்போது ஸ்வாஹா என்ற மந்திரம் பயன்படுவது போல், இறந்த முன்னோர்களுக்கு ஸ்வதா என்ற மந்திரம் பயன்படுகிறது. ஸ்வதா மந்திரத்தை உச்சரித்துச் செய்யப்படுகின்ற முதல் கிரியையான நாந்தீமுகத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆஹுதிப் பொருட்களாக இப்பது பிராணன்; அவற்றை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் பிராணனே.

அங்கிரஸ பரம்பரையில் வந்தவர்கள் அதர்வாங்கிரஸ முனிவர்கள். இறைநெறியை நாடுபவர்களுக்கு ஓர் உதாரணமாக இவர்கள் இங்கே குறிப்பிடப்படுகிறார்கள். இறை நெறியை நாடுபவர்களிடம் ஆற்றலாகத் திகழ்வது பிராணனே.

9. இந்த்ரஸ்த்வம் ப்ராண தேஜஸா ருத்ரோஸி பரிரஃக்ஷிதா
த்வமந்தரி÷க்ஷ சரஸி ஸூர்யஸ்த்வம் ஜ்யோதிஷாம் பதி

ப்ராண-பிராணனே; த்வம்-நீ; இந்த்ர-இந்திரன்; தேஜஸா-வலிமையால்; ருத்ர; அஸி-ருத்திரனாக இருக்கிறாய்; பரிரக்ஷிதா-எல்லா திசைகளிலும் காப்பவன்; அந்தரி÷க்ஷ-ஆகாசத்தில்; ஸூர்ய-சூரியன்; சரஸி-சஞ்சரிக்கிறாய்; ஜ்யோதிஷாம்-ஒளிகளின்; பதி-தலைவன்.

பொருள் : பிராணனே! நீயே இந்திரன். வலிமையால் நீ ருத்திரனாக இருக்கிறாய். எல்லா திசைகளிலும் காப்பவனாக இருப்பவன் நீயே. ஆகாசத்தில் சூரியனாக நீ சஞ்சரிக்கிறாய். ஒளிகளின் தலைவனும் நீயே.

பிரபஞ்சத்தில் நிகழ்கின்ற முத்தொழில்களைப்பற்றி இங்கே கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், ஒடுக்குதல் ஆகியவையே அந்த மூன்று தொழில்கள். இந்த மந்திரத்தில் இந்திரன் என்று கூறப்பட்டது பிரம்ம தேவனைக் குறிக்கிறது. படைப்புத் தொழிலைச் செய்கின்ற பிரம்மாவாகவும், காக்கும் கடவுளான விஷ்ணுவாகவும், அனைத்தையும் ஒடுக்குகின்ற கடவுளான ருத்திரனாகவும் இருப்பது பிராணனே. அதாவது பிராண சக்தியாலேயே அவர்கள் இந்தத் தொழிலைச் செய்கின்றனர்.
உலகின் இயக்கத்திற்கான பிராண சக்தியை அளிப்பது சூரியன். அந்தச் சூரியன் முதலான ஒளிப் பொருட்கள் அனைத்திற்கும் தலைவனாக, அதாவது அவற்றிற்கு ஆற்றலை அளிப்பவனாக இருப்பது பிராணனே.

10. யதா த்வமபிவர்ஷஸ்யதேமா ப்ராண தே ப்ரஜா
ஆனந்தரூபாஸ்திஷ்ட்டந்தி காமாயான்னம் பவிஷ்யதீதி

ப்ராண-பிராணனே; யதா-எப்போது; த்வம்-நீ அபிவர்ஷஸி-மழையாகப் பொழிகிறாயோ; அத-பிறகு; இமா-இந்த; தே-உனது; ப்ரஜா-உயிரினங்கள்; ஆனந்தரூபா-மகிழ்ச்சியுடன்; திஷ்ட்டந்தி-இருக்கின்றன; காமாய-வேண்டிய அளவு; அன்னம்-உணவு; பவிஷ்யதி-கிடைக்கும்; இதி-என்று.

பொருள் : பிராணனே! நீ மழையாகப் பொழியும்போது, இனி வேண்டிய அளவு உணவு கிடைக்கும் என்று உயிரினங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றன.

வாழ்க்கைக்கு ஆதாரம் உணவு. உணவுக்கு ஆதாரம் மழை. அந்த மழையாகப் பொழிந்து உயிரினங்களின் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது பிராணன்.

11. வ்ராத்யஸ்த்வம் ப்ராணைகர்ஷிரத்தா விச்வஸ்ய ஸத்பதி
வயமாத்யஸ்ய தாதார பிதா த்வம் மாதரிச்வன

ப்ராண-பிராணனே; த்வம்-நீ; வ்ராத்ய-தூய்மைப் படுத்தப்படாதவன்; ஏகர்ஷி-ஏகர்ஷி யாகமாக; அத்தா-உண்பவன்; விச்வஸ்ய-உலகின்; ஸத்பதி-அனைத்திற்கும் தலைவன்; வயம்-நாங்கள்; ஆத்யஸ்ய-உண்ணும் உனக்கு; தாதார-தருபவர்கள்; மாதரிச்வன-காற்றின்; பிதா-தந்தை; த்வம்-நீ.

பொருள் : பிராணனே! நீ தூய்மைப் படுத்தப்படாதவன். ஏகர்ஷி யாகமாக இருந்து, ஆஹுதிப் பொருட்களை உண்பவன் நீ. உலகிலுள்ள அனைத்திற்கும் தலைவன் நீ. ஆஹுதிப் பொருட்களை உண்ணும் உனக்கு அவற்றைத் தருபவர்கள் நாங்கள். காற்றின் தந்தையாக இருப்பதும் நீயே.

தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை சில சடங்குகள் மூலமும் மந்திரங்களின் மூலமும் தூய்மைப்படுத்தபட வேண்டும் என்ற சாஸ்திரங்கள் கூறுகின்றன. பிராணன் இறைவனிலிருந்து முதலில் தோன்றிய ஒன்று (1:4). தனக்கு முன்பு தோன்றிய யாரும் இல்லாததால், அதனைச் சடங்குகள் மூலம் தூய்மைப்படுத்த யாரும் இல்லை. அதனால் பிராணன் தூய்மைப் படுத்தப்படவில்லை. பிராணன் இறைவனிலிருந்து தோன்றியது. எனவே அது இயல்பாகவே தூய்மையானது, அதனைச் சடங்குகள் மூலம் தூய்மைப் படுத்தத் தேவையில்லை என்பதுதான் இங்கே வஞ்சப் புகழ்ச்சியாக தூய்மைப் படுத்தப்படாதவன் என்று கூறப்பட்டுள்ளது.

ஏகர்ஷி யாகம் என்பது அதர்வண வேதத்தைப் பின்பற்றுபவர்கள் செய்கின்ற ஒன்றாகும். அது மிகவும் பிரபலமாக இருந்தது என்பதால் இங்கே அது குறப்பிடப்பட்டுள்ளது. படைப்புக் கிரமத்தில் காற்று ஆகாசத்திலிருந்து தோன்றியது. இங்கே பிராணன் ஆகாசத்துடன் ஒன்றுபடுத்தப் பட்டு, காற்றின் தந்தையாகக் கூறப்பட்டுள்ளது.

12. யா தே தனூர்வாசி ப்ரதிஷ்ட்டிதா யா ச்ரோத்ரே யா ச சக்ஷஷி
யா ச மனஸி ஸந்ததா சிவாம் தாம் குரு மோத்க்ரமீ

யா-எந்த; தே-உனது; தனூ-அம்சம்; வாசி-பேச்சில்; ச்ரோத்ரே-கேட்பதில்; சக்ஷஷி-பார்ப்பதில்; ப்ரதிஷ்ட்டிதா-உள்ளதோ; மனஸி-மனத்தில்; ஸந்ததா-வியாபித்துள்ளதோ; தாம்-அவற்றை; சிவாம்-அமைதியுடன்; குரு-இருக்கச் செய்; உத்க்ரமீ; மா-கிளம்பிவிடாதே.

பொருள் : பிராணனே! பேசுவதிலும் கேட்பதிலும் பார்ப்பதிலும் உனது எந்த அம்சங்கள் உள்ளனவோ, மனத்தில் உனது எந்த அம்சம் வியாபித்துள்ளதோ அவற்றை அமைதியுடன் இருக்கச் செய், கிளம்பி விடாதே.

நமது செயல்கள் அனைத்திற்கும்-அவை உடம்பின் செயல்பாடுகளாக இருந்தாலும் சரி, மனத்தின் செயல்பாடுகளாக இருந்தாலும் சரி-தேவையான ஆற்றலை அளிப்பது பிராணன். ஆனால் ஒவ்வொரு புலனுக்கும் அதற்குத் தேவையான அளவு பிராணனே செல்ல வேண்டும். உதாரணமாக, பார்ப்பதைவிட பேசுவதற்கு அதிகமான பிராண சக்தி வேண்டும். எனவே பேச்சிற்கு அதிகப் பிராணன் செல்ல வேண்டும். சில வேளைகளில் உங்கள் உடலில் பிராணன் ஒரு பகுதியில் அதிகமாகவோ குறைவாகவோ செல்கிறது. அப்போது சமநிலை குலைகிறது. சமநிலை குலையும்போது. நோய் என்று நாம் அழைக்கின்ற ஒன்று உண்டாகிறது. என்கிறார் சுவாமி விவேகானந்தர். அத்தகைய ஒரு நிலை வராமல் இருக்கட்டும் என்று இந்த மந்திரம் பிரார்த்திக்கிறது.

பிராணன் புலன்களுக்குச் செல்ல வேண்டும், அமைதியாகச் செல்ல வேண்டும். அதாவது ஒவ்வொரு புலனுக்கும் அதற்குத் தேவையான அளவு பிராணன் செல்ல வேண்டும். பிராணன் கிளம்பிவிட்டால், அதாவது செல்லாமல் இருந்துவிட்டால் புலன்கள் எதுவும் இயங்க முடியாது (4). அப்படியும் நிகழக் கூடாது என்று பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.

13. ப்ராணஸ்யேதம் வசே ஸர்வம் த்ரிதிவே யத் ப்ரதிஷ்ட்டிதம்
மாதேவ புத்ரான் ரக்ஷஸ்வ ஸ்ரீச்ச ப்ரஜ்ஞாம் ச விதேஹி ந இதி.

த்ரிதிவே-மூன்று உலகங்களிலும்; யத்-எவை; ப்ரதிஷ்ட்டிதம்-உள்ளனவோ; இதம்-இந்த; ஸர்வம்-அனைத்தும்; ப்ரமணஸ்ய-பிராணனின்; வசே-கட்டுப்பாட்டில்; மாதா-தாய்; புத்ரான்-பிள்ளைகள்; இவ-போல்; ரக்ஷஸ்வ-காப்பாய்; ஸ்ரீ:ச-செல்வமும்; ப்ரஜ்ஞாம் ச-தெளிவான புத்தியும்; ந-எங்களுக்கு; விதேஹி-தருவாய்; இதி-என்று.

பொருள் : மூன்று உலகங்களிலும் எவையெல்லாம் உள்ளனவோ அவை அனைத்தும் பிராணனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. பிராணனே! ஒரு தாய் பிள்ளைகளைக் காப்பதுபோல் எங்களைக் காப்பாய். செல்வமும் தெளிவான புத்தியும் எங்களுக்குத் தருவாய்.

செல்வமும் இருந்தாலும் அதைக் காக்கவும், உரிய வழியில் செலவிடவும் தெளிந்த புத்தி வேண்டும். தெளிவான புத்தி இல்லாதவனின் செல்வம் அவனை அழிவுப்பாதையிலேயே செலுத்தும். எனவே செல்வத்தையும். கூடவே தெளிந்த புத்தியையும் பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.

இதி ப்ரச்னோபநிஷதி த்விதீய: ப்ரச்ன:

 
மேலும் பிரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி) »
temple news
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ... மேலும்
 
temple news

1.அறிவைத் தேடி மார்ச் 27,2012

அறிவு எனும் தீபம் சுடர்விட்டுப் பிரகாசிக்காவிட்டால் உலகம் முழுவதுமே காரிருளில் மூழ்கியிருக்கும் ... மேலும்
 
சென்ற அத்தியாயத்தில் பிராண சக்தியின் மகிமைபற்றி கண்டோம். இங்கே அதன் செயல் பாடுகளைப்பற்றி காண்கிறோம். ... மேலும்
 
உலகின் படைப்பு, மனித வாழ்க்கையில் இரண்டு வழிகள், இல்லறம், வாழ்க்கையைச் செயல்படுத்துகின்ற பிராண சக்தி ... மேலும்
 
பிரச்ன உபநிஷதம் கூறுகின்ற சாதனைப் பகுதிக்கு வருகிறோம். உலகைப்பற்றி, உலகை இயக்குகின்ற பிராணனைப்பற்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar