பதிவு செய்த நாள்
13
ஆக
2019
04:08
சிவன், விஷ்ணு இணைந்து சங்கர நாராயணராக காட்சி தர வேண்டும் என கோமதியம்மன் தவமிருந்த தலம் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில். இங்கு ’ஆடித்தபசு’ விழா மிக சிறப்பாக நடக்கும். நாக அரசர்களான சங்கன் என்பவன் சிவனையும், பதுமன் என்பவன் மகாவிஷ்ணுவையும் வழிபட்டனர். இதில் யார் பெரியவர் என்ற விவாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். சிவன், விஷ்ணு இருவரும் சமமானவர்கள் என்பதை உணர்த்த பார்வதி விரும்பினாள். இதற்காக பூலோகம் வந்த அவளுடன் தேவலோக பெண்களும் பசுக்களாக உடன் வந்தனர். அக்னி வளர்த்து, அதன் நடுவே ஒற்றை விரலை ஊன்றி நின்று, தவத்தில் ஈடுபட்டாள். சிவன், விஷ்ணு இணைந்து சங்கர நாராயணராக இங்கு காட்சியளித்தனர். இருவரும் சமமானவர்கள் என்பதை உணர்ந்த நாக அரசர்கள், பாம்பு வடிவிலேயே சுவாமியை வழிபட்டனர். காலப்போக்கில் சிவலிங்கத்தை புற்று மூடியது. இரு பாம்புகளும் அதனுள் இருந்தன. ஒருமுறை பக்தர் ஒருவர் அறியாமல் புற்றை இடிக்க, உள்ளே இருந்த பாம்பின் வால் வெட்டுப்பட்டு ரத்தம் பீறிட, புற்றுக்குள் லிங்கம் இருப்பதையும் கண்டு அதிர்ந்தார். பாண்டிய மன்னர், இங்கு கோவிலை கட்டினார்.
சங்கரலிங்கம், கோமதியம்மன் சன்னதிகளுக்கு நடுவில் சங்கர நாராயணர் சன்னதி உள்ளது. இதில் சிவனின் வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறை, அக்னி, ஜடாமுடி உள்ளன. காதில் குழை, கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை உள்ளன. விஷ்ணுவுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் குண்டலம், மார்பில் துளசி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பட்டாடை உள்ளன. காலையில் துளசி தீர்த்தமும், மற்ற நேரத்தில் விபூதியும் தருகின்றனர். சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கின்றனர். சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது.
அம்மன் சந்திரன் (மதி) போல அழகான முகமும், பசுக்களுடன் வந்து தவம் செய்ததாலும் ’கோமதி’ எனப் பெயர் பெற்றாள். ’கோ’ என்பதற்கு ’பசு’ என்பது பொருள். திங்கட்கிழமையில் பூப்பாவாடை, வெள்ளிக்கிழமையில் தங்கப்பாவாடை அணிவிக்கின்றனர். திருமண, புத்திரதோஷம் தீர மாவிளக்கு ஏற்றுகின்றனர். ஆடித்தபசு மண்டபத்தில் ஆக.13 அன்று காலையில் கோமதியம்மன் தவக் கோலமும், மாலையில் சங்கர நாராயணராக காட்சியளிக்கும் வைபவமும் நடக்கிறது. அம்மன் சன்னதியின் முன்புள்ள ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்தால் குழப்பம், கவலைகள் நீங்கும்.
* எப்படி செல்வது?
மதுரையில் இருந்து 120 கி.மீ.,