பதிவு செய்த நாள்
23
ஆக
2019
12:08
மைசூரு, தசரா விழாவிற்காக, முதல் கட்டமாக ஆறு யானைகள், நேற்று மைசூரு புறப்பட்டன. அமைச்சர்கள் தாமதமாக வந்ததால், யானைகளுக்கு இரண்டு முறை பூஜை செய்யப்பட்டது.பிரசித்தி பெற்ற 409வது மைசூரு தசரா விழா, இந்தாண்டு செப்., 28ம் தேதி ஆரம்பமாகிறது. இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா துவக்கி வைக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, யானை மீது தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவி பவனி வரும் ஜம்புசவாரி நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவரும். இதற்காக தசரா யானைகளுக்கு, ஒரு மாதத்துக்கு முன்னதாகவே பயிற்சிகள் துவங்கி விடும்.முதல்கட்டமாக, மைசூரு புறப்பட்ட, அர்ஜுனா, அபிமன்யு, பலராமா, ஈஸ்வரா, வரலட்சுமி, விஜயா ஆகிய ஆறு யானைகளுக்கு ஹூன்சூர் வீரனஹொசஹள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பொதுவாக மாவட்ட அமைச்சர் தலைமையில் நிகழ்ச்சி நடக்கும். ஆனால், மைசூரு கிருஷ்ணராஜா பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமதாஸ் தலைமையில் நேற்றைய நிகழ்ச்சி நடந்தது. யானைகளுக்கு பூஜை செய்து விட்டு அருகில் போடப்பட்டிருந்த மேடைக்கு முக்கிய பிரமுகர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அமைச்சர்கள் அசோக், சோமண்ணா, குண்டுலுபேட் பா.ஜ., - எம்.எல்.ஏ., நிரஞ்சன் ஆகியோர் வந்தனர். அதன் பின், யானைகளை மீண்டும் வரிசையாக நிற்க வைத்து, அமைச்சர்கள் கையால் இரண்டாவது முறையாக பூஜை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியை ஒட்டி வீரனஹொசஹள்ளி கிராமம் முழுவதும் வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மங்கள வாத்தியம் முழுங்க யானைகளுக்கு சிறப்பு உணவு வழங்கி, மைசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.பின், அமைச்சர் அசோக் அளித்த பேட்டி:கடவுள் விருப்பம் என்னவென்று எனக்கு தெரியாது. முதல்வர் எடியூரப்பா உத்தரவின் படி, தசரா யானைகளுக்கு பூஜை செய்துள்ளோம். பொறுப்பு அமைச்சர் ஆசை வைத்து வரவில்லை.இந்தாண்டு சில மாவட்டங்களில் கடும் வெள்ளத்தாலும், சில பகுதிகளில் வறட்சியாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் அரசு ஆதரவாக இருக்கும். யாரும் கவலைப்பட தேவையில்லை.அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு தயாராக உள்ளது. வெள்ளத்தால் பாதித்த பகுதிகள் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.