பதிவு செய்த நாள்
05
செப்
2019
02:09
அந்தியூர்: அம்மாபேட்டை அருகே, கன்னப்பள்ளி, செல்லாயூர் பகுதியில் பழமை வாய்ந்த மாரியம்மன் மற்றும் செல்லியாண்டி அம்மன் கோவில் உள்ளது. கடந்த மாதம், 21ல், பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. இதையடுத்து, 22ல் பெரியமாரியம்மனுக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சி, தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம் (செப்., 3ல்), பக்தர்கள் காவிரியாற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.
முக்கிய நிகழ்வான, நேற்று (செப்., 4ல்) காலை குண்டம் இறங்கும் விழா நடந்தது. முதலில் குண்டத்தில் கோவில் பூசாரி பூப்போட்டு வழிபட்ட பின், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 5ம் தேதி காலை கம்பம் பிடுங்குதல், சுவாமி திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறை வடைகிறது.