பதிவு செய்த நாள்
07
செப்
2019
04:09
’உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். நாம் யார் என்பதை அறிய முயற்சிக்க வேண்டும்.
கடவுள் பல வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதை ஆன்மிகவாதிகள் ’தசாவதாரம்’ என்பர். இதை ஏற்காத சிலர் மூடநம்பிக்கை என்பர். ஆனால் அப்படிப்பட்டவர் கூட பல வடிவங்களில் ஒரே மனிதர் இருப்பதை மையமாகக் கொண்டு வரும் கதைகளை விரும்பி படிக்கிறார்கள்.
ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் என்பவரின் ’டாக்டர் ஜேக்கில் அண்ட் மிஸ்டர் ஹைட்’ என்னும் நாவல் 1886ல் இங்கிலாந்தில் வெளியானது. மனிதனுக்குள் இரு குணம் கொண்டவர்கள் இருப்பதை கருவாக கொண்டு எழுதப்பட்ட கதை இது.
இது போன்ற நாவல், திரைப்படத்தை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ.... உங்களுக்குள் ஒன்றுக்கும் அதிகமான நபர்கள் உள்ளனர் என்பதை நம்பத் தான் வேண்டும். அதை அறிவதற்கான பயிற்சியை தரப் போகிறேன்.
இப்பயிற்சிக்கு காகிதம், பேனா மற்றும் நெருங்கிய நண்பர் தேவை.
முதலில் உங்களைப் பற்றிய வெளிப்படையான தகவல்களை நண்பரிடம் கேளுங்கள்.
உதாரணமாக உங்களின் நிறம், அணியும் சட்டை, பேண்டின் நிறம், தரம் போன்றவை. அவற்றை பேப்பரில் எழுதுங்கள். அவை அனைத்தும் உங்களுக்கும், நண்பருக்கும் தெரிந்த விஷயங்கள்.
இந்த நபர் தான் உங்களுக்குள் இருக்கும் நான்கு பேர்களில் முதலாவது நபர்.
இரண்டாவது, உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விஷயங்கள் குறித்தவை. ஒருவேளை நண்பருக்கு தெரிந்திருக்கலாம். உதாரணமாக உங்களுக்கு அடிக்கடி கோபம் வருமா? என கேட்டால் ’வராது’ என சொல்வீர்கள். ஆனால் உங்களுக்கு கோபம் வருவது மற்றவர்களுக்குத் தான் தெரியும். குறையை தெரிவித்தால் தவறாக நினைப்பீர்களோ என அவர்கள் சொல்லாமல் இருக்கலாம். உங்களைப் பற்றிய தகவல்களை நண்பர் வெளிப்படையாகச் சொல்லச் சொல்ல எழுதுங்கள். இவை குறையாகவும் அல்லது நிறையாகவும் இருக்கலாம். இந்த லிஸ்டில் இருப்பவர் தான் உங்களுக்குள் இருக்கும் இரண்டாவது மனிதர்.
மூன்றாவது சில விபரங்கள் நீங்கள் மட்டுமே அறிந்தவையாக இருக்கும். அவற்றை வெளியில் சொல்ல மாட்டீர்கள். இதனால் உங்களது இமேஜ் பாதிக்கப்படுமோ என்ற பயமே காரணம். உதாரணமாக இருட்டைப் பார்த்தால் பயம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் மற்றவரிடம் மறைத்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் அறிந்த இது போன்ற தகவல்களை நண்பருடன் பகிர்வதோடு, இது அவருக்குத் தெரியுமா என்றும் கேளுங்கள். ’தெரியாது’ என நண்பர் சொன்னால் அவர் தான் உங்களுக்குள் இருக்கும் மூன்றாவது மனிதர்!
உங்களைப் பற்றிய நான்காவது பகுதி தான் வினோதமானது. அது உங்களுக்கும் தெரியாது, நண்பருக்கும் தெரியாது! உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவர் மாரடைப்பு வந்து துரதிஷ்டவசமாக இறந்து கூட போயிருப்பார். அவருக்கு இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை இருப்பது தெரிந்திருந்தால் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றிருப்பார். அல்லது அவரது நண்பர் அல்லது உறவினருக்கு தெரிந்திருந்தால் கூட அவரைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது?
இந்த நான்கு நபர்களும் சேர்ந்தது தான் நீங்கள்!
நாம் நினைக்கிறோம் எல்லாம் நமக்குத் தெரியும் என்று! ஆனால் நம்மையே நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்பதை இதன் மூலம் உணர்ந்திருப்பீர்கள்.
இந்த பயிற்சியை 1955ல் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஜோசப் லப்ட் (ஒணிண்ஞுணீட ஃதஞூt) ஹேரி இங்ஹேம் (ஏச்ணூணூதூ ஐணஞ்டச்ட்) என்ற இரு மனோதத்துவ நிபுணர்கள் வெளியிட்டனர். தன்னைத் தானே அறியவும், நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றி அறியவும், குழுவாக பணியாற்றுவோரிடம் மனித நேயம் வளரவும் ’ஜோஹாரி விண்டோ’ (ஒணிடச்ணூடி ஙிடிணஞீணிதீ) என்னும் இந்த தத்துவம் பயன்படுகிறது.
வாழ்வில் முன்னேற வேண்டும் எனில், நான் யார்? மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? அது எனக்குத் தெரியுமா,
அது தெரிந்தால் ஏற்படும் பயன் என்ன? என்பதைப் பற்றி மனதில் தெளிந்த சிந்தனை இருக்க வேண்டும். விழித்திருக்கும் போது மட்டுமே மனத்தெளிவும், அதனால் சீரான முன்னேற்றமும் ஏற்படும்.
சரி... நமக்குள் இருக்கும் இந்த நான்கு மனிதர்களுக்கும், மூன்று குணங்களுக்கும் இருக்கும் தொடர்பு பற்றிய அறிய ஒரு வாரம் பொறுத்திருங்கள்!
கீதை நாயகனை வாழ்த்துவோம்
இன்றைய உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது. எதை நோக்கி என்பது யாருக்கும் தெரியவில்லை. இளமையை தொலைத்து பணத்தை தேடுகிறோம். ஆனால் முதுமையில் ஆரோக்கியம், அமைதியை பணத்தால் வாங்க நினைக்கிறோம். முடியுமா? எங்கும் அவசரம். எதிலும் அவசரம். நின்று நிதானமாக குளிப்பதோ, பல் தேய்ப்பதோ கூட கிடையாது. விடுமுறை நாளில் ஓய்வு எடுப்பதாக எண்ணி தூங்கி கழிக்கிறோம். ஆற, அமர உணவை ருசிக்க மறந்தோம். மின் விசிறி, ஏ.சி.,யை நம்பி இயற்கையை விட்டு விலகினோம். தென்றல் மேனியைத் தழுவும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாமல் வாழ்வைக் கழிக்கிறோம். இல்லை இழக்கிறோம். எப்படி வாழ வேண்டும் என்பதை ’கண்ணன் - என் தோழன்’ என்னும் பாட்டில் மகாகவி பாரதியார் விளக்குகிறார். கண்ணன் எப்படி வாழ்கிறான் என்பதை சொல்கிறார் பாருங்கள். இசையை ரசிப்பதில் வல்லவன் அவன். மனதை வருடும் மெல்லிசை, கண்களை மூடிக் கேட்டால் நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்லும்.
அதை எப்போது நம்மால் ரசிக்க முடியும்? அமைதியாக ஓரிடத்தில் மனம் நின்றால் மட்டுமே இசையை ரசிக்க முடியும். பாடல் நம்மை மயக்க வேண்டும் என்கிறார் பாரதியார். கர்நாடக இசையோ, ராகங்களோ தெரிய வேண்டும் என்பதில்லை. இசையை அமைதியாக உள் வாங்க பொறுமை போதும். இசையால் நோய் கூடத் தீரும் என அறிவியல் நிரூபித்துள்ளது. காரணம் அமைதியை ஏற்படுத்தி, மனதை இன்பத்தில் திளைக்கச் செய்தால் நோய் தீர்வது இயல்பு தானே. இசை போல ஒவியத்தை ரசிப்பதும் கலை. ஓவியத்தைப் பார்க்கும் போதே அதிலுள்ள உயிரோட்டத்தை காண வேண்டும். அதற்கு கண்ணிலே காதல் வேண்டும். ’கண்ணிலே அன்பிருந்தால்...கல்லிலே தெய்வம் வரும்’ என்பார் கண்ணதாசன். நம் மனத்தில் எழும் அன்பு, கண்கள் வழியாகப் பாயும் போது, கல்லில் உள்ள தெய்வம் பேசத் தொடங்கும். அன்பும், பொறுமையும் இருந்தால் இசையை ரசிப்பதும், ஓவியத்தைக் காதலிப்பதும் சுலபமே.
இசை, ஓவியக்கலை தெரிந்தால் தியானம் செய்ய தேவையில்லை என்கிறார் பகவான் ராமகிருஷ்ணர். காரணம் இவை மனதை ஒருநிலைப்படுத்தும். ஆனால் இவற்றை ரசிப்பதற்கு மனத்தூய்மை வேண்டும். ’தான்’ என்னும் அகங்காரம் இருந்தால் கலைகளை ரசிக்க முடியாது. ’இவன் என்ன பாடுகிறான்? இவன் என்ன வரைந்து கிழித்தான்? என்ற சிந்தனை வந்தால் எதையும் அனுபவிக்க முடியாது. பகவான் ரமணர் சீடர்களுடன் கிரிவலம் வந்த போது இறந்த நாய் அழுகிய நிலையில் கிடந்தது. உடன் வந்தவர்கள் மூக்கைப் பிடித்தபடி இகழ்ந்து பேச, ரமணர் மட்டும் “இந்த நாயின் பற்களைப் பார்த்தாயா? எவ்வளவு வெண்மையாக உள்ளது” என பாராட்டினார். தீமைக்குள் நல்லவற்றைக் காணும் உயர்ந்த குணம் பகவானிடம் இருந்தது. ரசிப்பதற்கு இத்தகைய குணம் வேண்டும் என்பதை யார் மறுக்க இயலும்?
வெள்ளைத் துணியில் உள்ள சிறு கரும்புள்ளியைக் காட்டினால் பரந்து கிடக்கும் வெண்மையை விடவும் கருப்புப் புள்ளியே நம் கண்ணுக்குத் தெரிகிறது. கண்ணன் இசையை ரசிக்கவும், ஓவியத்தை அனுபவிக்கவும் மட்டும் தெரிந்தவன் இல்லை. பகை என வந்து விட்டால் எதிரியுடன் மோதிச் சண்டையிட்டு வெல்லும் திறமை கொண்டவன். மலர் போன்ற மென்மையுடன் இருப்பவன். வில்லின் கணை போல் கடினமாக மாறி போர் புரியவும் தயங்க மாட்டான். இது தான் கர்மயோகியின் இயல்பு. உன் கைகள் எங்கே கண்ணீரைத் துடைக்க வேண்டுமோ அங்கே மென்மையாகவும், எங்கே எதிரிகளை ஒடுக்க வேண்டுமோ அங்கே வலிமையாகவும் இருக்க வேண்டும் என்பதே கண்ணன் சொன்ன வாழ்வியல் பாடம். இதை பகவத் கீதையாக அர்ஜூனனுக்கு உபதேசித்தான். கவுரவர்களுடன் போர் என்று வந்த பிறகு, ’போர் செய். அதுவே இப்போதைக்கு உனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமை’ என அறிவுரை சொன்னான்.
சனாதன தர்மம் என்னும் இந்து மதம் வெறும் வழிபாட்டை மட்டும் சொல்லவில்லை. மனிதன் வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்பதை சொல்கிறது. இசையை காதலிக்கவும், ஓவியத்தை ரசிக்கவும், போர்க்கலை பயிலவும் கற்றுத் தருகிறது. வாழும் முறையைக் கற்றுத் தரும் கண்ணனை ’கடவுள்’ என வேதம் கற்ற முனிவர்கள் துதிக்கின்றனர். இந்த வாழ்வியல் கீதையை அர்ஜூனனுக்கு மட்டும் அவன் சொல்லவில்லை. எனக்கும் சொன்னான். அவன் பெருமைகளை வாழ்த்தி மகிழ்வேன் என்கிறார் பாரதியார். அவரோடு நாமும் கண்ணனை வாழ்த்துவோம். காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
கண் மகிழ் சித்திரத்தில் -பகை
மோதும் படைத்தொழில் யாவினுமே திற
முற்றிய பண்டிதன் காண் உயர்
வேதமுணர்ந்த முனிவர் உணர்வினில்
மேவு பரம்பொருள் காண் நல்ல
கீதை உரைத்தெனை யின்புறச் செய்தவன்
கீர்த்திகள் வாழ்த்திடுவேன்.