பதிவு செய்த நாள்
09
செப்
2019
11:09
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் கல்மண்டபங்கள், போதிய பராமரிப்பின்றி சிதைந்து வருகிறது. இதனை பாதுகாப்பதில் அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் இருப்பதாக பக்தர்கள் வேதனைப்படுகின்றனர்.
தமிழர்களின் கட்டடக்கலையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் மண்டபங்கள், குளங்கள் உள்ளது. இதில் ஆண்டாள் கோயில் சிற்பங்கள் பிரமிப்பை ஊட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள திருமுக்குளம், நாடகசாலை குளம், கீழரதவீதியில் தேரின் கீழ்புறம் நீராவிகுளம், சர்க்கரைகுளம், திருப்பாற்கடல் ஆகிய குளங்கள் நீர் மேலாண்மைக்கு உதாரணமாக திகழ்கிறது. இதில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான அனைத்து குளங்களும் போதிய பராமரிப்பின்றி நாளுக்கு நாள் சிதைந்தும், கற்கள் பெயர்ந்தும் வருகிறது. இதைப்போல் செண்பகதோப்பிற்கு செல்லும் வழியிலுள்ள குட்டதட்டியில் இருக்கும் கல்மண்டபம், சாலியன்தோப்பு கல்மண்டபங்கள் சிதைந்தும், பெயர்ந்தும் கிடக்கிறது. மடவார்வளாகம் மெயின் ரோட்டில் இருந்த கல்மண்டபம் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. காளையார்குறிச்சி தெரு அருகிலுள்ள கல்மண்டபம் மற்றும் மதுரை ரோட்டில் பட்டத்தரசியம்மன் கோயில், இந்திராநகரிலுள்ள கல்மண்டபங்கள் தனிநபர்களின் பிடியில் இருக்கிறது. இவ்வாறு பாதுகாக்கபடவேண்டிய கல்மண்டபங்கள் பராமரிப்பின்றியும், இடிந்து விழும்நிலையிலும், தனிநபர்களின் ஆக்கிரமிப்பிலும் இருக்கிறது. இதனை மீட்பதில் ஆண்டாள் கோயில் மற்றும் தொல்லியல் துறை அக்கறையுடன் செயல்படுவதில்லை. இதனால் கல்மண்டபங்கள் சிதைந்து, சேதமடைந்து வருவது, ஸ்ரீவில்லிபுத்துார் மக்களின் மனதில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது.