பதிவு செய்த நாள்
03
அக்
2019
03:10
திருப்பூர்:சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அப்பூதி அடிகளாரின் வரலாற்று நாடகம், அனைவரையும் பரவசமடைச் செய்தது.
திருநாவுக்கரசர் காலத்தில் வாழ்ந்த அப்பூதியடிகள், சிறந்த சிவபக்தர். இவர், திருநாவுக்கரசர் பக்தியை பின்பற்றி, சிவத்தொண்டு புரிந்து வந்தார். திருநாவுக்கரசர் இவர் வீடு தேடி வந்த போது, விருந்து படைத்தார்.முன்னதாக, விருந்து படைக்க, வாழை இலை அறுக்க சென்ற, அவரது மூத்த மகன் பாம்பு கடித்து மடிந்தார்.நிலையை உணர்ந்த திருநாவுக்கரசர், சிவபெருமானிடம் வேண்டி, மீண்டும் உயிர்ப்பித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அத்தகைய சிவத்தொண்டரான அப்பூதியடிகளாரின் வரலாற்றை எடுத்துரைக்கும் நாடகம், கொங்கு மண்டலம் ஆடல்வல்லவன் அறக்கட்டளை சார்பில், குமரன்ரோடு, சவுடாம்பிகை அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது.இதேபோல், சோழ நாட்டில் திருநாட்டியத்தான் குடியில் வேளாளர் குலத்தில் பிறந்த கோட்புலி நாயனார். படைத்தளபதியாக விளங்கியவர். அரசரிடம் அத்தொழில் புரிந்து பெறும் செல்வத்தை இறைவன் திருக்கோவிலில் திருவ முதுக்காக நெல் வாங்கப்பயன்படுத்துவார்.
அவரின் வரலாற்றையும், பெருமையையும் எடுத்துரைக்கும் வகையிலும் மேலும் ஒரு நாடகம் இடம்பெற்றது. இதனை, ஏராளமானவர்கள் பங்கேற்று, நாடகத்தை பக்தி பரவசத் துடன் கண்டு மெய் மறந்தனர்.