மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில் வீடுகளில் கொலு அமைத்து நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதில் குழந்தையை சுற்றி கோலாட்டம் நடத்தினர்.
ஒன்பது நாட்கள் நடக்கும் நவராத்திரி விழாவில் பல சிறப்புகள், வழிபாடுகள் உண்டு. இதில் குறிப்பிடத்தக்கதாக கொலு அமைப்பது உள்ளது.பல அடுக்குகளில் பொம்மைகள் வைத்து, அதற்கு பூக்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்து, வழிபாடு செய்வார்கள். ஒன்பது நாளும் பூஜைகள் நடக்கும்.
நான்காவது நாளான நேற்று 2ல், மடத்துக்குளம் அருகே தெற்கு கண்ணாடிபுத்துாரில் வீட்டில் அமைக்கப்பட்ட கொலு முன்பாக குழந்தையை அமரவைத்து, ரோகினியாக கருதி பூஜை செய்தனர். பின், குழந்தையை சுற்றி பல சிறுமிகள் கும்மியடித்தும், கோலாட்டம் நடத்தியும் பக்தியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ’தொடர்ந்து பல ஆண்டுகளாக நவராத்திரி பூஜையில் ஈடுபட்டு வருகிறோம். ’தினமலரில்’ குழந்தையை ரோகினியாக பாவித்து பூஜிக்க வேண்டும் என தகவல் வெளியானது. இதனை படித்து, குழந்தையை கொலு முன்பு அமர்த்தி கோலாட்டம் நடத்தினோம். தொடர்ந்து கொலு வைத்து சிறப்பு வழிபாடு செய்வோம்’ என்றனர்.