பதிவு செய்த நாள்
29
அக்
2019
02:10
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா, கொடியேற்றத்துடன் நேற்று (அக்., 28ல்) துவங்கியது.
திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு கந்தசஷ்டி விழா, நேற்று கொடியேற்றத் துடன் துவங்கியது.காலை, 6:00 மணியளவில், கோவில் வட்ட மண்டபத்தில், உற்சவர் கந்தசுவாமி பெருமான், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின், கொடி மரம், கொடி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு, கோவில் சிவாச்சாரியார்களால், உற்சவ கொடி ஏற்றப் பட்டது.பின், உற்சவர் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆறு நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின், பிரதான விழாவாக, வரும், 2ம் தேதி, சூரசம்ஹாரம் விழா நடைபெறுகிறது. 3ம் தேதி, திருக் கல்யாணத்துடன் பெருவிழா நிறைவடைகிறது.