பதிவு செய்த நாள்
08
டிச
2019
03:12
சபரிமலை: கேரள மாநிலம் சபரிமலையில், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 20 நாட்களில், 11 லட்சம்பேர், அய்யப்பன் சுவாமியை தரிசனம் செய்து உள்ளனர்.
நவ., 17-ல், மண்டல காலம் துவங்கி, 20 நாட்கள் ஆன நிலையில், முதல் இரு நாட்களில் களைகட்டிய கூட்டம், அதன் பின் குறைந்து, சீரான நிலையில், பக்தர்கள் வந்து சென்றனர். இந்நிலையில், இரு நாட்களாக கூட்டம் அதிகரித்துள்ளது. டிச., 6 பாதுகாப்பு கெடுபிடி அதிகரித்த நிலையிலும், 72 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று காலை முதல், பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகமானது. பெரிய நடைப்பந்தலில், ஆன்லைன் கியூ மற்றும்சாதாரண வரிசையிலும், கூட்டம் நிரம்பி வழிந்தது.
நேற்று தரிசனம் நடத்தியோர் எண்ணிக்கை, 75 ஆயிரத்தை கடந்தது.கடந்த, 20 நாட்களில், 11 லட்சம் பேர், அய்யப்பன் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.கூட்டம் அதிகமாக இருந்தாலும், தரிசனம் நடத்துவதில், பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.நடப்பு சீசனில், இதுவரை, 29 கோடி ரூபாய்க்கு அரவணையும்; 4.5 கோடி ரூபாய்க்கு அப்பமும் விற்பனையானது. டிச., 10- முதல், பம்பையில் அப்பம், அரவணை கிடைக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.