காந்திஜிக்கு கீதை என்றால் உயிர். தினமும் அதன் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து விடுவார். விபரமறிந்தவர்களே கீதையை படிக்க வேண்டுமானால் பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டிய நிலையில், சாதாரணமானவர்கள் ‘ஆளை விடுங்க சாமி!’ என ஓடி விடுவார்கள். ஆனால், ‘கற்றலின் கேட்டலே எளிது’ என்பதில் நம்பிக்கையுடைய ஒரு நண்பர், காந்திஜியைப் பார்க்க வந்தார். “ஜி! தாங்கள் கீதையில் பெரிய வல்லுநர். எனக்கும் அதன் சாரத்தைக் கற்றுத் தரவேண்டும்,” என்றார். காந்திஜி சிரித்துக் கொண்டார். “சரி.. சரி... ஆஸ்ரமத்தில் சில பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
வண்டி வண்டியாகச் செங்கல் வந்து இறங்குகிறது. வண்டிக்கு எத்தனை செங்கல் வந்து இறங்குகிறது என்று என்னிடம் கணக்கு கொடுங்கள்,” என்றார். வந்தவரும் வேலையை முடித்தார். மறுநாளும் அதே வேலையைக் கொடுத்தார் காந்திஜி. இப்படியே சில நாட்கள் தொடர, வந்தவர் பொறுமை இழந்து விட்டார். “ஜி! நான் தங்களிடம் கீதை கேட்க வந்தால், நீங்கள் என்னைக் கூலிக்காரனைப் போல வேலை வாங்குகிறீர்களே! எப்போது கீதை கற்றுத் தரப் போகிறீர்கள்?” என்றார் விரக்தியுடன். “அது தான் கற்றுத் தந்தாகி விட்டதே” என்றார் காந்திஜி. “என்ன சொல்கிறீர்கள்?” என்று அதிர்ச்சியுடன் கேட்ட நண்பருடன் உரையாடலைத் தொடர்ந்தார் காந்திஜி. “இத்தனை நாள் செய்த வேலைக்கு கூலி வாங்கினீர்களா?” “இல்லை” “இந்த வேலையைச் செய்ததால் உங்களுக்கு ஏதாவது பலன் கிடைத்தா? “அதுவும் இல்லை”. பலன் கருதாமல், தன்னலமே இல்லாமல், பிறருக்காக பணி செய்வதென்பது தான் கீதையின் சாரம். இதைச் செய்தாலே கீதை படித்த மாதிரி தான்,” என்றார் காந்திஜி. நண்பர் நெகிழ்ந்து போனார்.