இஸ்ரயேல் மக்களில் முதலாமவராக விளங்குபவர் ஆபிரகாம். ஒருநாள் இவர் முதியவர் ஒருவரை, வீட்டிற்கு அழைத்து உணவு கொடுத்தார். சாப்பிடும் முன் ஆண்டவருக்கு நன்றி சொல்லி விட்டு சாப்பிடுவது ஆபிரகாமின் வழக்கம். விருந்தினரான முதியவரும் சொல்ல வேண்டும் என விரும்பினார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.
இதைக் கண்டு கோபம் கொண்ட ஆபிரகாம், “ உணவு கொடுத்த ஆண்டவருக்கு நன்றி செலுத்தாமல் சாப்பிடலாமா?” என்றார். “நீர் உணவு தந்தீர். நான் சாப்பிடுகிறேன். இதில் ஆண்டவருக்கு ஏன் நன்றி செலுத்த வேண்டும்?” எனக் கேட்டார். கோபம் அடைந்த ஆபிரகாம் சாப்பிட விடாமல் முதியவரை விரட்டினார். மறுநாள் ஆபிரகாமிடம், “நான் 80 ஆண்டுகள் சாப்பாடு கொடுத்து வருகிறேன். அந்த மனிதர் ஒருநாளும் நன்றி சொன்னதில்லை. ஆனால், ஒரு வேளை சாப்பாடு கொடுக்கும் போது நன்றி சொல்லாததால் சாப்பிட விடாமல் விரட்டினாயே” எனக் கேட்டார் ஆண்டவர்.
இஸ்ரயேலர்களின் மத்தியில் அவர்களின் பிதாவான ஆபிரகாம் பற்றி இக்கதை வழங்கப்படுகிறது. உலகில் ஆபிரகாம் போல சிலரும், முதியவரைப் போல பலரும் இருக்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய கிருபையாலே உயிரோடிருக்கிறோம். தேவன் இருக்கிறார் என விசுவாசிக்கிறவன் உணவு, உடை இல்லாதவர்களைப் பார்த்தால் அவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். அதுவே விசுவாசத்தின் வெளிப்பாடு.